ஸ்வர்ணமால்யா நாட்டியத்துடன் 'பல்லவ மல்லை'... மாமல்லபுரம் குறித்த 'பேச்சுக் கச்சேரி'!
சென்னை: 'பல்லவ மல்லை' என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரி, வரும் டிசம்பர் 24 & 25 ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கவிருக்கிறது.
தமிழ் பாராம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி 2011ல் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டது. இப்போது வெற்றிகரமாக ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது இந்த நிகழ்வு.
இம்முறை 'பல்லவ மல்லை' என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரியாக, வரும் டிசம்பர் 24 & 25 ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில், மாமல்லபுரத்தின் வரலாறு, கலைச் சிறப்பு, பல்லவர் காலத்து கல்வெட்டுகள், மல்லையின் இலக்கியச் சிறப்புகள் குறித்து பல்வேறு ஆய்வாளர்களின் உரைகள் இடம் பெறுகின்றன.
'இந்த பேச்சுக் கச்சேரி மாமல்லபுரத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரி நாட்களில் எத்தனையோ முறை போய் வந்த இந்த சரித்திர இடத்துக்கு அடுத்த முறை போகும்போது அந்த இடம் பற்றிய உங்கள் பார்வை மாறியிருக்கும், புதிய பரிமாணங்கள் தெரியும்', என்கிறார் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் எஸ் சுவாமிநாதன்.
தொடக்க நாளான சனிக்கிழமை (24) மாலை 5.30 மணிக்கு நடிகை ஸ்வர்ணமால்யாவின் நாட்டிய நாடகம் இடம் பெறுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் எழுதிய அங்கத நாடகத்தைத் தழுவி அமைக்கப்பட்டுள்ள நாட்டிய நாடகம் இது.
மேலும் விபரங்களுக்கு https://thtpechchukkachcheri.wordpress.com தொடர்புக்கு ஜெ ராமகிருஷ்ணன்: 98414 89907