வினோதினி, சுவாதி, இந்துஜா, சித்ரா, அஸ்வினி - ஒருதலை காதல் பறித்த உயிர்கள்
காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவது அதிகரித்தது. இப்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்வது, கத்தியால் குத்தி கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
Recommended Video
சென்னை: காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா, சோனியா வேளச்சேரி இந்துஜா, கே கே நகர் அஸ்வினி வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன.
காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. நுங்கம்பாக்கம் சுவாதி, விழுப்புரம் நவீனா, மடிப்பாக்கம் இந்துஜா, மதுரை சித்ராதேவி, அஸ்வினி என பெண்கள் கொடூரமாக கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
2012ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சினிமாவில் காதலிக்க மறுத்த பெண்ணைப் பழிவாங்க ஆசிட் வீசி கொல்வான் கொடூரன். அதே வருடத்தில் வினோதினி, வித்யா உள்ளிட்ட பெண்கள் மீது ஆசிட் வீச்சு ஆளாகி உயிரிழந்தனர். தமிழகத்தில் 2015ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 5847 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாதி கொலை
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
எரித்துக்கொல்லப்பட்ட நவீனா
12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவை, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஒருதலையாக காதலித்த செந்திலின் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்ட நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, நவீனாவை கட்டிப்பிடித்து எரித்து கொன்று விட்டான்.
அடித்துக்கொல்லப்பட்ட சோனாலி
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கரூர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலைக்குக் காரணம் ஒருதாலைக் காதல்தான்.
3 பெண்கள் கொலை
தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினாவை, சீகன் கோமஸ் என்பவர் பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொலைச் செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துக்கொண்டார். அதேநாளில் திருச்சியில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை, பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தியிருக்கிறார். உடனே சுற்றி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து பாலமுருகன் மீது வீசி தாக்கி, அவனைச் சுற்றி வளைத்து போலீஸில் ஒப்படைத்தனர். அதே நாளில் புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி. எழிலரசன் என்பவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ரோஸ்லினுக்கு அரிவாள்வெட்டு பரிசாக கிடைத்தது.
குத்தி கொன்ற இளைஞர்
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த தான்யாவை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஜாகீர் கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு தப்பினார். இதில், சம்பவ இடத்திலேயே தன்யா பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்காட்டில் தலைமறைவாக இருந்த ஜாகீரை கைது செய்தனர்.
இந்துஜா, சித்ராதேவி
கடந்த ஆண்டு ஒருதலைக்காதலுக்கு வேளச்சேரியை சேர்ந்த இந்துஜா பலியாகியுள்ளார். காதலிக்க மறுத்தார் என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர். இதே போல கடந்த மாதம் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சித்ராதேவி ஒருதலைக்காதலுக்கு பலியானார். திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி, தீவைத்துவிட்டு, தப்பியோடினார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி சித்ராதேவிக்கு மரணமடைந்தார்.
கொல்லப்பட்ட அஸ்வினி
சென்னை கே கே நகரில் கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை விரட்டி விரட்டி கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளான் அழகேசன் என்ற கொடூரன். பெண்களை துரத்தித் துரத்தி சீண்டினால் தான் காதல் பிறக்கும் என்று தவறாக போதிக்கும் திரைப்படங்கள், நம்மை காதலிக்காத பெண் வேறு யாரையும் காதலிக்கக் கூடாது என்பதுடன், அத்தகைய பெண்களை எவ்வாறு படுகொலை செய்வது என்பதையும் விரிவாக விளக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவையும் இந்த கொடூர கொலைகளுக்குக் காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.