சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 18ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை வரும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் ஆணை பிறப்பித்துள்ளார்.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி, கடந்த மாதம் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கொலைவழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் சனிக்கிழமையன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால், நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நெல்லையில் இருந்து இன்று அதிகாலை சென்னை கொண்டு வரப்பட்ட ராம்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராம்குமாரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ராயப்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும் ராம்குமாரிடம், இன்று காலை 11.30 மணிக்கு எழும்பூர் குற்றவியல் 14வது நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி கோபிநாத் விசாரணை நடத்தினார்.
சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணையில் ராம்குமாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார் நீதிபதி கோபிநாத். ராம்குமார் முழு சுய நினைவுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் முடிவில் ராம்குமாருக்கு 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.