மன அழுத்தத்தில் இருக்கிறாரா ராம்குமார்? கோர்ட்டில் அரசு டாக்டர் கூறியது என்ன தெரியுமா?
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் மன உளைச்சலால் அவதிப்பட்டு வருவதாக புழல் சிறையில் அவரை சந்தித்த வழக்கறிஞர் ராமராஜ் கூறியிருந்தார். ஆனால், அரசு டாக்டர் கூறும் விவரமோ வேறு மாதிரி இருக்கிறது.
இன்போசிஸ் ஊழியர், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், 18 நாள், நீதிமன்ற காவலின்கீழ், புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், எழும்பூர் பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று அவர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸ் தரப்பில் ராம்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்குமாறு, உதவி அரசு வழக்கறிஞர், ஆர்.கொளஞ்சிநாதன் நீதிபதியிடம் கோரிக்கைவிடுத்தார்.
போலீஸ் விசாரணை தேவை
சுவாதியை கொன்றபின் அல்லது முன், ராம்குமார் வேறு எவருடனாவது தொடர்பு கொண்டிருந்தாரா? இந்த கொலைக்கு பின்னணியில் வேறு எவரும் உள்ளனரா? கொலையை எப்படி செய்தார் என்பது குறித்தெல்லாம் விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால், 5 நாட்கள், போலீஸ் காவல் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
உயிருக்கு ஆபத்து
ராம்குமார் தரப்பு வக்கீல் ராமராஜ், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போலீஸ் காவலில் ராம்குமாரை ஒப்படைத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அவர் அச்சம் தெரிவித்தார். சிறையில் ராம்குமாரை தான் சந்தித்தபோது அவர் மன உளைச்சலில் அவதிப்பட்டு வந்ததாகவும் எனவே போலீஸ் காவல் தரக்கூடாது என்று அவர் வாதிட்டார்.
மன உளைச்சல்
ஜூலை, 12ல், புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்தேன். கழுத்து அறுபட்ட இடத்தில் காயம் ஆறாததால், சரியாக பேச முடியவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சையும், இதுவரை அளிக்கவில்லை என்று வாதிட்டார் ராமராஜ்.
நன்றாக இருக்கிறார்
புழல் சிறையின் டாக்டர் நவீன், கோர்ட்டில் ஆஜராகி, ராம்குமார் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். அவர் மன உளைச்சலுக்கும் ஆளாகவில்லை என்றார் நவீன். ராம்குமார் கழுத்தில் போடப்பட்ட தையலையும் புதன்கிழமை இரவு (நேற்று) அகற்றிவிடலாம் எனவும் டாக்டர் தெரிவித்தார்.
பாதுகாப்பு இருக்கிறது
டாக்டர் சான்றிதழை ஏற்றுக்கொண்டே, நீதிமன்றம், ராம்குமாரை 3 நாட்கள், போலீஸ் காவலில் வழங்க ஒப்படைத்துள்ளது. மேலும் நெல்லையில் இருந்து, சென்னைக்கு, ராம்குமாரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்ததையும் சுட்டி காட்டிய கோர்ட், பாதுகாப்பு அச்சம் என்ற வாதத்தை புறம் தள்ளியது.