நாட்டையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கு.. ஆரம்பமும், முடிவும்!
சென்னை: சென்னை இன்போசிஸில் மென்பொறியாளராக பணியாற்றிய சுவாதி, கடந்த ஜூன் 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். இச்சமயத்தில் ஜாதி, அரசியல், இனம், மதம் ஆகிய பலவிதமான சாயங்கள் பூசப்பட்டு நாள்தோறும் பரபரப்பான யூகங்கள் வந்து கொண்டே இருந்தன.
பின்னர் இந்தக் கொலையில தொடர்புடையதாக கருதப்பட்ட ராம்குமார் கைது செய்யப்பட்டபோதிலும் உண்மைகுற்றவாளியை தப்பிக்க விட்டது போலீஸ் என்பது போன்று கருத்துகள் நிலவின. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த தமிழச்சியின் ஒவ்வொரு பேஸ்புக் பதிவுகளும் படிப்போர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் ராம்குமார் மரணம் அடைந்து விட்டதால் இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் இன்று முடித்துவைத்தது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது முதல் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது வரை முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 24-ந் தேதி காலையில் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாதியை பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணிக்கு சுவாதியின் பின்னால் நின்றிருந்த மர்மநபர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார்.
கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடல் 3 மணி நேரமாக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திலேயே இருந்தது. காலை மணிக்கு பின்னரே ரயில்வே காவல் துறையினர் சுவாதியின் உடலை அப்புறப்படுத்தினர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவில் சந்தேகத்திற்குரிய நபரின் உருவம் பதிவானது தெரியவந்தது.
ஜூன் 25
போலீஸார் அந்த நபர் தான் கொலையாளியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் சிசிடிவி பதிவை ஊடகங்களில் வெளியிட்டனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய சவுராஷ்டிரா நகரில் உள்ள மற்றொரு வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
சுவாதி படுகொலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது.
ஜூன் 26
சுவாதி படு கொலை வழக்கு ரயில்வே காவல்துறையிடமிருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சுவாதியின் செல்போன் உரையாடல்கள் அடிப்படையில் விசாரணை தொடங்கியது.
ஜூன் 29
சுவாதியின் பேஸ்புக் அக்கவுண்ட் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டது. சுவாதியின் படுகொலையில் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்பிருப்பதாக நடிகர்கள் ஒய்ஜி மகேந்திரன், எஸ்வி சேகர் ஆகியோர் ஃபேஸ்புக் பதிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
ஜூன் 30
நுங்கம்பாக்கத்தில் நடைபாதையில் தப்பி ஓடிய நபர்தான் கொலையாளி என தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ். சுவாதி செல்போன் கடைசியாக சூளைமேட்டில் சிக்னலில் இயங்கியது. பின்னர் கொலையாளி தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் மேன்சனில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மேன்சன் காவலாளி மற்றும் மேனேஜர் அளித்த தகவலின் பேரில் குற்றவாளி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என உறுதியானது.
ஜூலை 1
செங்கோட்டை அருகே சுப்பிரமணியபுரத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அன்று காலை முதல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குற்றவாளி ராம்குமாரை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். ஆடு மேய்த்து விட்டு மாலையில் வீடு கொலையாளி ராம்குமார் வீடு திரும்பிய பின்னரும் போலீஸார் கண்காணித்தனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் ராம்குமாரை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் போலீசாரை பார்த்த ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராம்குமார், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் பேசினார். போலீஸார் நடத்திய விசாரணையில் ராம்குமார், சுவாதியை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜூலை 6
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செப். 18
புழல் சிறையில் இருந்த ராம்குமார் அங்கு திறந்த நிலையில் இருந்த மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அக்.2
ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெளியிட்டப்பட்டது.
மார்ச் 7, 2017
குற்றவாளி என கருதப்பட்ட ராம்குமார் உயிரோடு இல்லாததால் சுவாதி கொலை வழக்கை எழும்பூர் நீதிமன்றம் முடித்து வைத்தது.