தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம்: போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
சென்னை: சுவாதி கொலை செய்யப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது. இதனிடையே சுவாதி வழக்கு மற்றும் தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பற்றி ஒவ்வொரு மாத இறுதியிலும் டி.ஜி.பி. உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தலைமை தாங்கினார். இதில் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி. அசோக்குமார், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) திரிபாதி, உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிகமாக பேசப்பட்டு வரும் சுவாதி கொலை வழக்கு குறித்தும், அதுபற்றிய விசாரணையின் நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை காவல்துறை ஆணையர் எடுத்துரைத்தார். கொலையாளியை பிடிப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வியூகம், சிக்கியுள்ள புதிய ஆதாரங்கள் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேலும், சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினைகள் உள்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது. மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம், 6.15 மணிக்கு நிறைவடைந்தது.