சுவாதி கொலை... இன்றோடு ஓராண்டு நிறைவு- இன்னும் வராத சிசிடிவி கேமரா
சுவாதி கொலை செய்யப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால் ரயில் நிலையங்களில் இன்னும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை.
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அதிகாலை 6.30 மணியளவில் ரயிலுக்காக காத்திருந்த மென் பொறியாளர் சுவாதி கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். சுவாதி கொலை செய்யப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது.
கடந்த ஆண்டு இதே நாளில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது. ஆனால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்னமும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.
சுவாதி படுகொலை
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி, பரனூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு ஜூன் 24ம் தேதி காலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ராம்குமார் கைது
சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், திருநெல்வேலி மாவட்டம் சுப்பரமணியபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கழுத்தறுபட்ட நிலையில் கைது செய்தனர். விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே சில வாரங்களில் புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்தது போலீஸ்.
ராம்குமார் பெற்றோர் கோரிக்கை
இந்த வழக்கு தொடர்பாக, போதிய ஆவணங்கள் கிடைத்தால் சுவாதி கொலையில் உள்ள முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் எனவும் ராம்குமார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.சுவாதி கொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டுமென ராம்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா
இதை தொடர்ந்து, ரயில் நிலையங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட 43 ரயில் நிலையங்களில் 2016 டிசம்பர் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்தனர்.
கொலை நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனாலும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்கூட இன்னும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
இன்னொரு அசம்பாவிதம்
சுவாதி கொலை போல மற்றொரு அசம்பாவித சம்பவம் அரங்கேறும் முன்பாக ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா.