போலீஸ் விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது? தினமும் பேப்பர் படித்து அறிந்துகொண்ட ராம்குமார்
நெல்லை: சுவாதி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், மறுநாள் கொலையாளி ராம்குமார் நெல்லை மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
ஓடுகளால் வேயப்பட்ட சிறு வீடுதான் ராம்குமாரின் சொந்த வீடு. அங்கு, பெற்றோர், தங்கை ஆகியோருடன் தங்கியிருந்தார்.
கொலையாளியை போலீசார் வலைவீசி தேடிவருவதாக ஊடகங்களில் தகவல் வெளியானதை பார்த்து, பயந்து போனார் ராம்குமார்.
பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், போலீசார் நடத்தி வரும் விசாரணை குறித்து, தினசரி செய்தித்தாள்களை வாங்கி படித்துள்ளார். டிவி உள்ளிட்ட பிற ஊடக செய்திகளை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார்.
சென்னை மேன்ஷன் வாட்ச்மேன் தந்த தகவலையடுத்து, நெல்லை போலீசாருக்கு தகவலை பரிமாறினர் சென்னை போலீசார். இதையடுத்து மஃப்டியில் ராம்குமார் வீட்டை நோட்டமிட்டனர் போலீசார்.
ராம்குமார் சொந்த ஊரில்தான் இருப்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர், கூடுதல் போலீசாரை வரவழைத்து, நேற்று இரவு ராம்குமாரை கைது செய்ய முயன்றனர். இதையறிந்ததும் பிளேடால் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றார் ராம்குமார்.
போலீசார் துரிதமாக செயல்பட்டு உயிரோடு அவரை மீட்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ராம்குமார் பயன்படுத்தும் படுக்கையின் கீழே, கடந்த பல நாட்களாக வாங்கப்பட்ட செய்தித்தாள்கள் கிடக்கின்றன. போலீசார் விசாரணை எந்த கோணத்தில் சென்று கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த செய்திகளை பயன்படுத்தியுள்ளார் ராம்குமார்.