மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக் கொலை.... திருமாவளவன் திடுக் தகவல்
பண்ருட்டி: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி மதம் மாறி காதலித்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டது முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தொடக்கத்தில் நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர் ஆகியோர் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்பிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.
பின்னர் நெல்லை மீனாட்சிபுரம் ராம்குமார் தான் கொலையாளி என கூறி அவரை கைது செய்தனர். இந்த நிலையில் சுவாதியின் நண்பர் முகமது பிலால் சித்திக் என்பவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே சுவாதி, ரம்ஜான் பண்டிகையின் போது நோன்பு இருந்ததாகவும், அவர் விரைவில் இஸ்லாமுக்கு மாறிவிடுவார் என்ற தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தெரிந்திருந்ததாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஆணவக் கொலைதான்...
இந்த நிலையில் பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது ஆணவகொலை. ராம்குமார் பேஸ்புக்கில் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக எந்த தகவலும் இல்லை.
மூடி மறைக்கும் போலீஸ்
சுவாதி கொலை வழக்கில் போலீசாரின் விசாரணையில் முரண்பாடு உள்ளது. இந்த கொலை வழக்கில் பின்னணியில் உள்ள உண்மைகளை போலீசார் மூடி மறைக்கின்றனர்.
சிபிஐ விசாரணை தேவை
தமிழக போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. ஆகையால் சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
நாளை ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மக்கள் நல கூட்டணி சார்பில் நாளை ஒன்று கூடி முக்கிய முடிவு எடுக்கப்படும். இதில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
வேர்களைத் தேடி பயணம்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பலப்படுத்துவதற்காக வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேர்களை தேடி பயணம் நடைபெறும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறை செயலிந்து உள்ளது. பெரும்பாலான நேரங்களில் ஆளுங்கட்சிக்கு சேவகம் செய்வதற்கே காவல்துறையினருக்கு நேரம் சரியாக உள்ளது.
கஞ்சா சாக்லேட்டுகள்...
தமிழ்நாட்டின் தலை நகரில் கஞ்சா சாக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மூலம் நாட்டையே காவி மயமாக்கல் நடக்கிறது. சமஸ்கிருதத்தை திணிப்பதை கைவிட வேண்டும். சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.