சுவாதியின் பெற்றோர் மாயம்? கடத்தப்பட்டனரா? பிரான்ஸ் தமிழச்சி 'பகீர்' கேள்வி
சென்னை: சென்னையில் வெட்டி கொல்லப்பட்ட சாப்ட்வேர் பொறியாளர் சுவாதியின் வீடு பல நாட்களாக பூட்டப்பட்டுள்ளதாகவும் அவரது பெற்றோர் கடத்தப்பட்டுள்ளனரா? என்றும் பிரான்ஸில் உள்ள சமூக ஆர்வலர் தமிழச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து மர்மங்கள் சூழ்ந்ததாக இருந்து வருகிறது. சுவாதியை வெட்டி கொலை செய்ததாக கூறி ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் அவர் கைது செய்யப்பட்டபோதே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார் என கூறப்பட்டது. பின்னர் ஜாமீனில் வெளிவர இருந்த நிலையில் திடீரென சென்னை புழல் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸில் உள்ள தமிழச்சி என்பவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சுவாதியின் பெற்றோர் மாயமாகிவிட்டதாக ஒரு திடுக்கிடும் பதிவை தமிழச்சி வெளியிட்டிருக்கிறார்.
அதில், சுவாதியின் பெற்றோர் தலைமறைவு. அவர்களாகவே சென்றார்களா? சுவாதியை மிரட்டிய கூட்டத்தினரால் கடத்தப்பட்டார்களா?
அல்லது யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள்? பல நாட்களாக வீடு பூட்டப்பட்டுள்ள மர்மம் என்ன?
இவ்வாறு தமிழச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.