ஸ்வாதி கொலை.. ராம்குமார் மரணம்.. ஜெ. இறப்பு.. கொடநாடு படுகொலை.. அதிமுக ஆட்சியின் ஓராண்டு மர்மங்கள்
அதிமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து ஓராண்டாய் தொடர்கிறது மர்ம மரணங்களின் கதை. ஸ்வாதி கொலை, ராம்குமார் தற்கொலை, ஜெயலலிதா இறப்பு, கொடநாடு படுகொலை என நீள்கிறது மர்ம மரணங்களின் அவிழிக்கப்படாத முடிச்சுக்கள்.
சென்னை; ஐடி ஊழியர் ஸ்வாதி கொலை, ராம்குமார் தற்கொலை, ஜெயலலிதா இறப்பு, கொடநாடு படுகொலை என மரணத்தின் மீதான மர்மங்கள் அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனையாய் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. அதன் ஓராண்டு நிறைவில், சாதித்தது என்ன?
எம்ஜிஆருக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக. அவர் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து பல படுகொலைகள் தமிழகத்தில் நடைபெற்றது. அதற்கெல்லாம் பதில் தேடி முடிப்பதற்கும் அவரது மரணம் குறித்தே பல சந்தேகங்களை தேட வேண்டிய சூழல் தமிழக மக்களுக்கு உருவாகிவிட்டது.
ஸ்வாதி மரணம்
ஐடி ஊழியரான ஸ்வாதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப் பகலில் அனைவரும் பார்க்க கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை இவர்தான் செய்தார் என்று ராம்குமார் என்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டாரே தவிர, ஏன் ஸ்வாதி கொல்லப்பட்டார் என்ற தகவல் இன்று வரை வெளியாக வில்லை.
ராம்குமார் ‘தற்கொலை’
சரி. ஸ்வாதி மரணத்தின் முடிச்சுக்கள்தான் அவிழ்க்கப்படவில்லை. அவரைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட ராம்குமார் எப்படி இறந்தார்? ஸ்வாதி கொலையில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட ராம்குமார் திடீரென ஒருநாள் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றார் கூறி போலீசார் கூறினார்கள்.
மரணத்தில் மர்மம்
பின்னர், செத்தேவிட்டார் என்று போலீசார் அறிவித்தனர். இவருடைய மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக இவரது தந்தை போராட்டம் நடத்தினார். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை தமிழக அரசு. ஸ்வாதி கொலையோடு, ராம்குமாரின் மரணத்தையும் சேர்த்து புதைத்துவிட்டனர் தமிழக காவல்துறையினரும் ஆட்சியாளர்களும்.
ஜெ. மரணம்
இவை எல்லாமே, சக்தி வாய்ந்த ஆட்சியை தமிழகத்திற்கு வழங்கியதாகக் கூறப்பட்ட ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடைந்தவைகள்தான். இன்று வரை இது தொடர்பாக மர்மங்கள் அனைத்தும் ரகசியங்களாக மறைந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது ஜெயலலிதாவின் மரணமே ஒரு மர்மமாக மாறி இருக்கிறது.
அந்த 75 நாட்கள்
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு காய்ச்சல், நீர் சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், சாப்பிடுகிறார், பேசுகிறார், பார்க்கிறார் எனச் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், திடீரென டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
விலகுமா மர்மம்?
இந்த மரணத்திலும் மர்மம் இருக்கிறது என்று தமிழக மக்கள் கருதி இருந்த வேளையில், நீதி விசாரணை வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் போர்க் கொடி தூக்கினார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே கண்டுபிடிக்கப்படாத மர்ம மரணங்களின் உண்மைகள் ஜெயலலிதா மறைந்த பின்னர், அதுவும் அவருடைய மர்மம் குறித்த மர்மங்கள் அவ்வளவு சீக்கிரமாகவா விலகிவிடும்?
கொடநாடு கொலை
முதல்வரின் இறப்பிற்கே பதில் தெரியாத நிலையில், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம்பகதூர் அடித்துக் கொல்லப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ஆவணங்களை கொள்ளை அடிக்கவே இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தாலும் ஓம்பதூர் ஏன் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற உண்மை இன்னும் வெளியாகவில்லை.
கனகராஜ் என்கவுண்டர்
இந்தக் கொலையில் தொடர்புடை கனகராஜ் என்பவரும் மர்மமான முறையிலே இறந்துள்ளார். சாலை விபத்தில் இறந்தார் என்று போலீசார் சொன்னாலும், இவர் இறந்தது என்கவுண்டரில் என்கிறார்கள் சேலம்வாசிகள்.
நீளும் மர்ம முடிச்சுகள்
இப்படி தமிழகத்தில் தொடந்து கொலை நடைபெற்று வருகிறது. அதற்கான உண்மை காரணங்கள் என்ன என்பது வெளியுலகத்திற்கு தெரியாமலேயே ஊத்தி மூடப்படுகிறது. இவைதான் அதிமுகவின் ஓராண்டு சாதனையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவதோடு அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.