திரைப்படமாகிறது.. நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை!
சென்னையையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கு படமாகி வருகிறது.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதியின் கதை திரைப்படமாகிறது.
சென்னை இன்போசிஸில் மென்பொறியாளராக பணியாற்றிய சுவாதி, கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். பெரும் மர்மமாக இருந்த இந்தக் கொலைச் சம்பவம் பல தொடர் பரபரப்புகளுக்கும் அச்சாரம் இட்டது.
இந்தக் கொலையில தொடர்புடையதாக கூறப்பட்ட நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் ஜூலை 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ராம்குமார் தற்கொலை
புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் செப்டம்பர் 18-ஆம் தேதி திடீரென மின் வயரை கடித்து தற்கொலை செய்ததாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு சுவாதி கொலை வழக்கும் இழுத்து மூடப்பட்டது.
மர்ம மரணம்
சுவாதி கொலை தொடர்பாக பிரான்சில் வசித்து வரும் தமிழச்சி என்பவர் பேஸ்புக்கில் போட்ட கருத்துக்கள் ஒருபக்கம் பெரும் பரபரப்பைக் கிளப்பின. மறுபக்கம் ராம்குமார் மர்ம மரணமும் சேர்ந்து இந்த வழக்கை வரலாறு காணாத மர்ம நாவலாக மாற்றி விட்டது.
படமாகிறது
இத்தனை மர்மங்கள் நிறைந்த சுவாதியின் கொலை வழக்கு படமாகி வருகிறது. ஜெயசுபஸ்ரீ புரொடெக்ஷன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்துக்கு "ஸ்வாதி கொலை வழக்கு" என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்
இதில் ராம்குமாராக புதுமுகங்கள் மனோவும், ஸ்வாதியாக ஆயிராவும் நடிக்கின்றனர். அஸ்மல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தை எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்குகிறார்.
கொலை முதல் ராம்குமார் மரணம் வரை
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்த படத்தில், ஸ்வாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து ராம்குமார் சிறையில் இறந்தது வரை நடந்த சம்பவங்களை எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனை சிறிதும் கலக்காமல் அப்படியே படமாக்குகிறோம். இதற்காக, இதில் தொடர்புடைய நபர்கள், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, விவரங்களை திரட்டி திரைக்கதை அமைத்து இருக்கிறோம் என்றார்.