மகளை கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்: சுவாதி பெற்றோர் கோரிக்கை
சென்னை: மகளை கொடூரமாக கொலை செய்த கொலையாளிக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சுவாதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் சுவாதி. இந்த கொலை வழக்கில் , குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராம்குமாரின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு என்னமாதிரியான தண்டனை கிடைக்கும் என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
சுவாதியின் பெற்றோர், மகளை கொன்ற குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் செங்கோட்டையில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், இந்த வழக்கில் அவருக்கு என்ன என்ன தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என சட்ட நிபுணர் அஜிதா தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டியில், இந்த வழக்கில், குற்றவாளியாக கருதப்படும் நபர் கிடைத்துள்ளார்.
அவருக்கே ஏற்பட்ட ஒரு தலைக் காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்காகவும் கொலை செய்துள்ளாரா? குற்றவாளிக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளனரா? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பதெல்லாம் முழுமையான புலன் விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும்.
அதற்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் இப்போது மாவட்டந்தோறும் மகிளா நீதிமன்றங்கள் உள்ளன. சென்னையிலும் மகிளா நீதிமன்றம் உள்ளது. மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கினை விரைவாகவும் துரிதமாகவும் வழக்கை நடத்த வாய்ப்புள்ளது.
ஒரு மாதத்திற்குள்ளோ இரு மாதத்திற்குள்ளோ தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ள ஒரு வழக்குதான் இது. பொதுமக்களை மிகவும் பாதிக்க வைத்த கொலை சம்பவம் அனைவர் கவனமும் இந்த வழக்கின் மீது இருக்கிறது. இவர்தான் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டால், மரணதண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர் அஜீதா கூறினார்.
இந்த கொலை பணத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறையுடன் சேர்ந்து செய்ப்படவில்லை. அதனால் மரணதண்டனை அளிக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படலாம். காதல் அல்லது ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆயுள் தண்டனையோ அல்லது இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்க வாய்ப்புள்ளதது என்றும் கூறியுள்ளார் அஜீதா.