சுவாதியை கொலை செய்தது எப்படி? ராம்குமாரை நடித்து காட்ட வைக்க போலீஸ் திட்டம்
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என அவரை நடித்துக் காட்ட வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி இளம்பெண் சுவாதி, 24 கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். சுவாதியை கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளை சம்பவ இடத்தில் போலீசார் உடனடியாக கைப்பற்றினர். ஆனால், அந்த அரிவாளில் ராம்குமாரின் கைரேகையோ வேறு வகை பதிவுகளோ இல்லை. எனவே, அரிவாளை ஆதாரமாக வைத்து கொலையாளி ராம்குமாருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாது.
தற்போது, அவர்களுக்கு கிடைத்துள்ள ஒரே ஆதாரம் ரயில்வே பகுதியை சுற்றியிருந்த வீடியோ பதிவுகளும், ராம்குமார் தங்கியிருந்த அறையில் பறிமுதல் செய்யப்பட்ட ராம்குமாரின் ரத்தம் படிந்த சட்டையும்தான். இதை போலீசார் தற்போது பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், வேறு ஏதாவது தடயம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டு நெல்லையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், தற்கொலை செய்ய முடிவு செய்து பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். ராம்குமாரை மீட்ட போலீசார், அவரது கழுத்தில் ஒரு துணியை சுற்றி, உடனடியாக அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ராம்குமாருக்கு, டாக்டர்கள் குழுவினர் 18 தையல்கள் போட்டு 2 மணி நேரம் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ராம்குமார், பொது மருத்துவ பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்,.108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ராம்குமார் சென்னை கொண்டு வரப்பட்டார்.
ராம்குமார் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர் மயில்வாகனம் தலைமையிலான 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கைதிகள் வார்ட் உட்பட, மருத்துவமனையைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராம்குமார் நலமாக உள்ளதாக மருத்துவமனைத் தலைவர் கூறியுள்ளார். ராம்குமார் பேசுவாதாகவும் அவரது கழுத்தில் உள்ள காயங்கள் குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். ராம்குமாரின் உடல் நலத்தை 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ராம்குமாரின் உடல்நிலை சரியான பின்னர், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என அவரை நடித்துக் காட்ட வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.