என் மகள் வாழ்க்கையைப் படமாக்குவதா.. சுவாதியின் தந்தை கோபம்!
சுவாதியின் கொலை வழக்கை படமாக்க தடை விதிக்க வேண்டும் என்று அவரது தந்தை சந்தான கிருஷ்ணன் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னை: சுவாதியின் கொலை வழக்கை திரைப்படமாக்கினால் தங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும் என்று சுவாதியின் தந்தை சந்தான கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை இன்போசிஸில் மென்பொறியாளராக பணியாற்றிய சுவாதி, கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். பெரும் மர்மமாக இருந்த இந்தக் கொலைச் சம்பவம் பல தொடர் பரபரப்புகளுக்கும் வித்திட்டது. மேலும் இக் கொலைக்கு அரசியல், ஜாதி சாயங்கள் பூசப்பட்டன.
இந்தக் கொலையில தொடர்புடையதாக கூறப்பட்ட நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் ஜூலை 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், சிறையில் மின்வயரை கடித்து உயிரிழந்துவிட்டார்.
விடை தெரியாத கொலை
இதனால் சுவாதி கொல்லப்பட்டது ஏன், உண்மையான குற்றவாளி யார், இப்படிக் கொடூரமாக வெட்ட வேண்டிய காரணம் என்ன என அனைத்து கேள்விகளுக்கான விடைகளும் மண்ணோடு மண்ணாகி விட்டது.
திரைப்படம்
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை படமாக்கவுள்ளதாக ஜெயசுபஸ்ரீ புரொடெக்ஷன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா என்பவர் தெரிவித்தார். மேலும் படத்துக்கு ஸ்வாதி கொலை வழக்கு என்றே பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்வாதி முதல் ராம்குமார் வரை
சுவாதி கொலையானது முதல் ராம்குமார் தற்கொலை வரை உண்மை மாறாமல் படமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுவாதியின் கொலை வழக்கை படமாக்க தடை விதிக்க வேண்டும் என்று அவரது தந்தை சந்தான கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தடை கோரும் தந்தை
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் சந்தான கிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார். அதில் சுவாதியின் கொலை வழக்கு படமாக்கப்பட்டால் தங்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை அது கொடுக்கும் என்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரெய்லர் ரிலீஸ்
இந்தப் படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியுள்ள நிலையில் ஸ்வாதியின் தந்தை தடை கோரியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. படம் வெளி வருமா அல்லது தடைபடுமா என்பது தெரியவில்லை.