பன்றிக்காய்ச்சலுக்கு சென்னை சிறுவன் பலி: நாடுமுழுவதும் 1,731 பேர் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு இரண்டரை வயது சிறுவன் முகமது பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்த நோய்க்கு 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சிறுவன் பலி
பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கலீல் என்பவரது 2 வயது மகன் முகமது, நேற்று உயிரிழந்தான்.
பெற்றோர் குற்றச்சாட்டு
கடந்த 10 நாட்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முகமதுவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் முகமது உயிரிழந்தான். தனியார் மருத்துவமனையே மகனின் மரணத்திற்கு காரணம் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
30,000 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 1,731 பேர் பலியாகி உள்ளனர்.சுமார் 30,000 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:நடப்பாண்டில், கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து, கடந்த 15ஆம் தேதி வரை பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்து 1,731 பேர் பலியாகினர். நாடு முழுவதும், இதன் பாதிப்பு 29,938 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 2009 ஆண்டினை விட அதிகமாகும். அந்த ஆண்டில் 27 ஆயிரத்து 236 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.
உயரும் பலி எண்ணிக்கை
கடந்த 2010 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சலுக்கு 1,763 பேர் உயிரிழந்தனர் 20,000 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த மூன்று மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 1,731 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.