பன்றிக்காய்ச்சலுக்கு சென்னை பெண் மரணம்; நாடுமுழுவதும் பலி எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு
சென்னை: சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு இளம் பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 2,123 பேர் உயிரிழந்துள்ளனர். 34,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் நித்யலட்சுமி ( வயது 28). போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹெச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.
தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?
2123 பேர் பலி
நாடு முழுவதும் இந்நோயால் 34,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (4-ம்தேதி) வரை 2,123 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பலி அதிகம்
நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 436 பேரும், அதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 431 பேரும், ராஜஸ்தானில் 426 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 309 பேரும் பலியாகியுள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
கர்நாடகாவில் 85, தெலுங்கானாவில் 77, பஞ்சாப்பில் 56, அரியானாவில் 53, உத்தரப்பிரதேசத்தில் 38, மேற்கு வங்காளத்தில் 26, ஆந்திராவில் 23, சட்டீஸ்கரில் 23, இமாச்சலப்பிரதேசத்தில் 23, ஜம்மு-காஷ்மீரில் 20, தமிழ்நாட்டில் 16, கேரளாவில் 14, உத்தராகாண்ட் மற்றும் டெல்லியில் 12 என நாடு முழுவதும் 2123 பேர் பலியாகியுள்ளனர்.
35000 பேர் பாதிப்பு
நாடுமுழுவதும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக 34,636 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் கொளுத்தும் நிலையிலும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.