கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு 3 வது நபர் பலி: தமிழகத்தில் பலி 13 ஆக உயர்வு
கோவை: தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்து 41 வயது நபர் ஒருவர் இன்று பலியானதை அடுத்து, அம்மாவட்டத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அருகே தாராபுரத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் கடந்த வாரம் புனே சென்றுவிட்டு ஊர் திரும்பினார். அதுமுதல் அவருக்கு காய்ச்சல் அதிகரித்தது.
மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
கடந்த ஞாயிறன்று 39 வயது பெண்ணும், நேற்று 60 வயது மூதாட்டியும் பன்றிக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்த நிலையில், இன்று 3வது நபர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் 277
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 277 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 பேர் தலைநகர் ஜெய்ப்பூரில் பலியாகியுள்ளனர்.
குடும்பத்தோடு பாதிப்பு
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் லிங்கோஜி (49). மும்பையில் ஒரு நிறுவனத்தில் என்ஜீனியராக பணிபுரிந்து வந்த இவருக்கு காய்ச்சல் விடாமல் நீடித்ததால் மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
என்ஜீனியர் தற்கொலை
அப்போது, அவரது மனைவி, 2 மகள்களுக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மனமுடைந்த பிரகாஷ் மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.
நாடுமுழுவதும் பலி அதிகரிப்பு
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு மார்ச் 1ஆம் தேதிவரை 1115 பேர் பலியாகி இருப்பதாகவும், 21 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த நிலையில் மேலும் பலர் அடுத்தடுத்து உயிரிழப்பதால் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.