அதிமுக அமைதி காத்தால் ஜெயலலிதாவுக்கு மேலும் ஆதரவு பெருகும்.. புதுவை கண்ணன்
புதுச்சேரி: பெங்களூர் தனி நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே பெரிய அளவில் அனுதாபமும், ஆதரவும் கிடைத்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் இது அதிகமாகவே உள்ளது. எனவே அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காத்தால் அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும். இல்லாவிட்டால் எதிரிகளுக்கே லாபமாக போய் முடியும் என்று புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் கூறியுள்ளார்.
கண்ணன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது நினைவிருக்கலாம். புதுவை மாநில ராஜ்யசபா உறுப்பினராகவும் அவர் இருக்கிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கண்ணன் கூறுகையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்காலிகமாக ஒரு சிறிய சறுக்கலாக இருக்கலாம். ஆனால் இந்தத் தீர்ப்பினால் பொதுமக்களிடையே அனுதாபமும், ஆதரவும் அதிகரித்திருக்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அ.தி.மு.க தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன். ஏனென்றால் அ.தி.மு.க. தொண்டர்களின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிரிகளுக்குத்தான் லாபமாக அமையும். அதனால் பொறுமை காக்க வேண்டும். பொதுமக்களிடையே ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆதரவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு இதோடு முடிந்துவிட்டது என்று நினைத்தவர்கள் விரைவில் பெரிய ஏமாற்றத்தை அடைவார்கள். அவருக்கு எப்போதும் என்னுடைய தார்மீக ஆதரவு உண்டு. தேவைப்பட்டால் அவரை எங்கு வேண்டுமானாலும் சென்று சந்திப்பேன் என்றார் அவர்.