Exclusive: கேரள வெள்ள நிவாரணத்திற்கு... ரூ. 1 கோடியை அள்ளி கொடுத்த டி.கே.ரங்கராஜன்
கேரளாவுக்கு டி.கே.ரங்கராஜன் ரூ.1 கோடி நிதியுதவி
சென்னை: சத்தமே இல்லாமல் ஒரு பெரிய விஷயத்தை செய்திருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்!
டி. கே. ரங்கராஜன் ஒரு இந்திய அரசியல்வாதி! தொழிற்சங்கவாதி!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்!!! மாநிலங்களவை உறுப்பினர்!!!
இவர், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் அளித்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை மாநிலங்களவைத் தலைவருக்கும் அனுப்பியுள்ளார்.
அரசு சார்பாகவோ, கட்சி சார்பாகவோ நிதியுதவிகளை அளிப்பது வேறு. ஆனால் தன் சொந்த தொகுதியின் வளர்ச்சி மேம்பாட்டிலிருந்து இவ்வளவு பெரிய தொகையை கொடுத்த முதல் அரசியல் தலைவர் டி.கே.ரங்கராஜன்தான். இந்த பரந்த மனப்பான்மைக்காகவே அவரை "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் சந்திக்க நினைத்தோம். அப்போது அவர் பேசியவை:
கேள்வி: ஒரு கோடி ரூபாயும், ஒரு மாத சம்பளமும் கேரள வெள்ளத்திற்கு வழங்கியுள்ளீர்கள். இதற்கு கேரள அரசு தரப்பில் இருந்து என்ன சொல்லப்பட்டது?
இன்னைக்குத்தான் பணத்தை அனுப்பி உள்ளேன். இனிமேல்தான் பார்லிமெண்டுக்கு போய் இந்திய அரசு சார்பில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அனுப்பிய பிறகு எல்லோருக்கும் சொல்வது போல பொதுவான நன்றியை கண்டிப்பாக சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
கேள்வி: மத்திய அரசு கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியை மத்திய அரசு போதுமான அளவுக்குத்தான் ஒதுக்கியுள்ளதா? அல்லது ஏதேனும் பாரபட்சம் உள்ளது என்று நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக பாரபட்சம் உள்ளது. கேரளாவில் ஏற்பட்டிருப்பது மிகப் பெரிய அழிவு. அங்கு புதிய நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போயுள்ளனர். இதையெல்லாம் சரிகட்ட மத்திய சர்க்கார் முழுமையான பொறுப்பு எடுத்து செய்ய வேண்டும்.
கேள்வி: உங்களை போலவே மற்ற எம்பி.க்களும் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து உதவி செய்வார்களா என்று எதிர்பார்க்கிறீர்களா?
கண்டிப்பாக. ஒவ்வொரு எம்.பி.யும் கண்டிப்பாக அனுப்புவார்கள். தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்துதான் தரவேண்டும் என்பதில்லை. திமுகவில் ஒரு மாத சம்பளம் தர நினைப்பது போலவும், சிலர் அவர்களது ஒரு மாத சம்பளத்தையும் வழங்குவார்கள் என்றே நம்புகிறேன்.
கேள்வி: தமிழக அரசு உதவி திருப்திகரமாக உள்ளதா?
இதில் திருப்தி, திருப்தி இல்லை என்று சொல்ல முடியாது. தமிழகம் என்றில்லை, எல்லா மாநிலங்களுமே தங்களுடைய சக்திக்கு ஏற்றார்போல் நிதியுதவிகளை தந்திருக்கிறார்கள். அதனால் இதுபோன்ற உதவிகளை எல்லாம் குறை சொல்வதற்கில்லை.
கேள்வி: வெள்ளத்திற்கு காரணம் தமிழக அரசுதான் என்று கேரளாவின் குற்றச்சாட்டிற்கு நீங்கள் தரும் பதில் என்ன?
இப்போதைக்கு இது பற்றி எந்த கருத்தும் கூறாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பதிலளித்தார்.