எடப்பாடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாட்டோம்.. திமுக உறுதி!
எடப்பாடி அரசு மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராது என்று செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை : முதல்வர் பழனிசாமி அரசு மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராது என்றும், மற்றவர்கள் கொண்டு வரும் பட்சத்தில் உரிய முடிவை திமுக எடுக்கும் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
டிடிவி. தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று அளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்ததால் தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது. முதல்வரை மாற்ற வேண்டும் என்று எதிர்ப்பு எம்எல்ஏக்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாக எம்எல்ஏக்கள் கூறினர்.
இந்நிலையில் எதிர்க்கட்சியான திமுகவின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் என்னவென்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆளுநர். ஆனால் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்றுவிட்டார்.
இதன் மூலம் பாஜக கட்டுப்பாட்டில் இருந்து கண்டு அவர்களின் உத்தரவை ஏற்று ஆளுநர் செயல்படுவது போலத் தெரிகிறது. 19 எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மனுவை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் உத்தரவிட்டு இருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.
மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக ஆளுநரின்செயல்பாட்டையும் மக்கள் மத்தியில் நாங்கள் எடுத்து செல்வோம்.
தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வராது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மற்றவர்கள் கொண்டு வரும் பட்சத்தில், தி.மு.க. அப்போது உரிய முடிவை எடுக்கும், என்று கூறினார்.