தேர்தல் சீர்திருத்தங்கள்.. மிரண்ட அரசியல் ஜாம்பவான்கள்.. '90களில் தெறிக்கவிட்ட சேஷன்
தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் அரசியல் கட்சிகளை தெறிக்கவிட்டவர்தான் மாஜி தலைமை தேர்தல் ஆணையர் சேஷன்
Recommended Video
சென்னை: இந்திய தேர்தல் வரலாற்றின் பக்கங்களில் டி.என். சேஷன் எனும் ஆழிப்பேரலை வீச்சு அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிடாது... ஓரளவேனும் தேர்தல் கால கட்டுப்பாடுகள் இன்று நடைமுறையில் உள்ளது எனில் அதற்காக பெரும் பங்களிப்பைச் செய்தவர் டி.என். சேஷன்.
இந்திய தேர்தல் என்பது திருவிழா போல நடந்து கொண்டிருந்த காலம்... விடிய விடிய மக்கள் காத்திருப்பார்கள்... தலைவர்கள் ஊரெல்லாம் அலைந்துவிட்டு அந்த பாயிண்ட்டுக்கு வரும் அபோது அதிகாலை 5 மணிகூட ஆயிருக்கும்.. ஒரு மணிநேரம் உரையாற்றிவிட்டு அடுத்த பாயிண்ட்டுக்குப் போவார்கள்.
அதேபோல் நகரம், கிராமங்களில் ஒரு வீடு பாக்கி இருக்காது.. அனைத்து வீட்டு சுவர்களிலும் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் 'விரும்பியோ விரும்பாமலோ' திணிக்கப்பட்டிருக்கும். மானாவரியாக போஸ்டர்கள் திரும்பிய திசையெங்கும் கிடைத்த இடமெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும்.
தலைவர்கள் கூட்டங்களுக்கு லாரி லாரியாக மக்களை அள்ளிச் செல்லலாம்.. அதற்கான செலவுகளுக்கு எல்லாம் கட்டுப்பாடு இல்லை.. தேர்தல் காலத்திலேயே அரசுகள் அறிவிப்புகளை அள்ளிவிடலாம்.. இப்படித்தான் இந்திய தேர்தல் முறை ஓடிக் கொண்டிருந்தது... டி.என். சேஷன் எனும் புயல் பதவியேற்கும் வரை.
புதிய கட்டுப்பாடுகள்
இப்போது நிலைமை எல்லாமே தலைகீழ்தான்.. தேர்தல் தேதி அறிவித்தவுடன் அத்தனையும் தேர்தல் ஆணையத்தின் கீழ்.. அரசு புதிய அறிவிப்புகள் வெளியிட முடியாது. இரவு மணி 10 ஆகிவிடுமோ? என விஜயகாந்த் பாணியில் வாட்ச் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள்... செலவு கணவு காட்டாதவர்கள். கூடுதல் செலவு செய்தவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட முடியாது என்கிற நிலை.
தேர்தல் விதிகளில் கறார்
பொது சுவர்களில் விளம்பரம் செய்ய முடியாத நிலை என அத்தனைக்கும் கட்டுப்பாடு... இத்தனைக்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் சாட்சாத் சேஷன்தான். இன்னும் சொல்லப் போனால் புதைந்து கிடந்த தேர்தல் ஆணைய விதிகளை தூசி தட்டி எடுத்துப் போட்டு அரசியல் கட்சிகளை அலறவிட்டார்.
ஜாம்பவான்களை அலறவிட்டவர்
விதிகளை மீறினால் கட்சிகளின் அங்கீகாரத்துக்கு வேட்டு, தேர்தல் ரத்து என அதிரிபுதிரி ஆடியவர் சேஷன். இத்தனைக்கும் சேஷன் பதவி வகித்த (1990-96) காலம் இந்திய அரசியலில் ஜாம்பவனாகளான வி.பி.சிங், நரசிம்மராவ், சந்திரசேகர், வாஜ்பாய், தேவ கவுடா ஆகியோர் கோலோச்சிய காலம். எதற்கும் அஞ்சா சிங்கமாக தேர்தல் சீர்திருத்தங்களை அட்டகாசமாக அரங்கேற்றினார்.
சேஷன் யார்?
இப்போதும் தேர்தலில் கரைபுரண்டும் வாக்கு பர்சேஸை ஒழிக்க வேண்டுமானால் சேஷன், பழைய பன்னீர்செல்வமாக வர வேண்டும் என்றுதான் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் விரும்புகிறார்கள். சென்னை மாகாணத்துக்குட்பட்ட பாலக்காட்டில் பிறந்தவர்தான் சேஷன். இப்போது அவருக்கு 85 வயதாகிறது. திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் துணை ஆட்சியராக, ஆட்சியராக, தமிழக அரசின் பல துறைகளின் செயலாளராக பணியாற்றி தலைமை தேர்தல் ஆணையராக உயர்ந்தவர் சேஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது.