மும்பை மருத்துவமனையில் டி.ஆர்.பாலு - இன்று பைபாஸ் ஆபரேஷன் - மும்பை விரைந்தார் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பிரபலமுமான டி.ஆர்.பாலு, இதய நோய் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது.
மும்பையில் உள்ள பிரசிடென்ட் என்ற தனியார் மருத்துவமனையில் பாலு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது குடும்பத்தினர் உடன் உள்ளனர். நேற்றுதான் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய ஆலோசனை கூறினர். இதையடுத்து இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது.
பாலு இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மும்பை புறப்பட்டுச் சென்றார். அவருடன், முரசொலி செல்வமும் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
இன்று மும்பையில் பாலுவைச் சந்தித்து விட்டு நாளை ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை திரும்பவுள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.