இவர்தான் டி.ஆர்.பாலு.. கருணாநிதி ரசித்த தொண்டன்!
டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர்.
சென்னை: டி.ஆர்.பாலு இன்று திமுக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு என்பதுதான் டி.ஆர்.பாலுவின் ஒரிஜினல் பெயர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். 1980-களில் சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்து பணியாற்றியவர்! அப்போது டி.ஆர்.பாலுக்கென்று ஒரு தனி செல்வாக்கு கட்சியில் உருவானது. திமுகவை சென்னையில் ஒரு பலம் பொருந்திய அமைப்பாக மாற்றியதில் முக்கிய பங்கு டி.ஆர்.பாலுவுக்குத்தான் போய்ச் சேரும்.
சென்னை மாவட்ட செயலாளர்
அதனால்தான் 1996 முதல் 4 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 4 முறையும் தென் சென்னை மக்களவை தொகுதியிலிருந்துதான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையின் மாவட்ட செயலாளர் பொறுப்பை அடுத்து, தனது சொந்த மாவட்டத்திலும் அரசியல்ரீதியான கவனம் செலுத்தி அங்கும் திமுகவின் செல்வாக்கை நிலைநிறுத்தினார்.
தரைவழி போக்குவரத்து அமைச்சர்
இதன்பின்னர், திமுக சார்பில் மன்மோகன்சிங் அமைச்சரவையில் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். இதில் முக்கியமாக சொல்ல வேண்டுமானால், நாடு முழுவதும் சாலைகளை அமைப்பதில் பெரும் கவனம் செலுத்தினார். ஏராளமான நான்கு வழிச் சாலைகள் இன்று நாடு, நகரம் முழுவதும் உருவாகி இருப்பதற்கு டி.ஆர்.பாலு முக்கிய காரணி ஆவார்.
சேது சமுத்திர திட்டம்
மேலும் அந்த துறை அமைச்சராக இருந்தபோதே, சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட தூண்டுகோலாக இருந்தார். தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையே பாலமாக இருந்து திமுக வளர்ச்சிக்கு உதவியவர். மறைந்த முரசொலி மாறனுக்கு பிறகு டெல்லியில் அதிக செல்வாக்கோடும், கட்சி ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும் செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் டி.ஆர்.பாலுதான்!
[எதிர்பார்த்தபடியே.. திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்!]
வெறித்தனமான பாசம்
மறைந்த கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக கடைசிவரை செயல்பட்டவர் டி.ஆர்.பாலு. இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியின் அரசியல் நிழல் என்றுகூட சொல்லலாம். அதனால்தான் 2001-ல் ஜெயலலிதா அரசு கருணாநிதியை கைது செய்தபோது, ஆத்திரமும், கோபமும் அடைந்த டி.ஆர்.பாலு, சிபிசிஐடி ஆபீசில் தன் காரை கொண்டு ஆவேசமாக மோதி உள்ளே நுழைய பார்த்தார். அந்த அளவுக்கு கருணாநிதி மீது வெறித்தனமான பாசத்தை வைத்தவர்.
கடின உழைப்பாளி
டி.ஆர்.பாலு, ஒரு கடின உழைப்பாளி. தொண்டர்களோடு தொண்டர்களாக இருப்பதுதான் டி.ஆர்.பாலுவின் பிளஸ் பாயிண்ட்டே. அவ்வளவு எளிமை!! தற்போது, முதன்மை செயலாளராக பொறுப்பு வழங்கி இருப்பது டி.ஆர்.பாலுவின் அரசியல் அனுபவத்திற்கும், கழகம் மீது அவர் வைத்திருக்கும் தீவிர பற்றுக்கும், கழகம் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும்தான்!!