பழனியிடம் சீட்டை பிடுங்கி தனக்குத்தானே 'மொட்டை' போட்டுக் கொண்ட டி.ஆர். பாலு!
சென்னை: திமுகவின் அதிமுக்கிய வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கஷ்டப்பட்டு போராடி, முன்னாள் நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்திடம் இருந்து பிடுங்கி போட்டியிட்ட தஞ்சை தொகுதியில் தோல்வியை தழுவி உள்ளார்.
இன்று நடைபெறும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
மேலும், திமுகவின் நட்சத்திர வேட்பாளர்களே மண்ணைக் கவ்விய நிலையில் முன்னாள் கப்பல் துறை அமைச்சர் மற்றும் திமுகவின் முக்கிய புள்ளியான டி.ஆர்.பாலுவின் தோல்விதான் மிகவும் வேதனையான கதையாய் உள்ளது.
போராடி பெற்ற தொகுதி:
ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிய கதையாக எப்போதும் பழனிமாணிக்கத்தின் கோட்டையாக இருந்த தஞ்சாவூரை, போராடி வாங்கினார் டி.ஆர்.பாலு.
தோல்வி பயம்:
முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தவர் பழனிமாணிக்கம்.எப்பொழுதும் தென்சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலேயே போட்டியிடும் பாலு, தோல்வி பயம் காரணமாக தன்னுடைய சொந்த ஊரான தஞ்சாவூரில் போட்டியிட முடிவு செய்தார்.
அடம் பிடித்த பழனி:
ஆனால், அங்கு எப்போதும் போட்டியிடும் பழனிமாணிக்கமோ முடியவே முடியாது என்று அடம் பிடித்தார்.பாலுவோ, ஸ்டாலின் மூலமாக தாஜா செய்து தஞ்சாவூரை வாங்கினார்.முறுக்கிக் கொண்ட பழனியையும் ஸ்டாலின் சமாதானம் செய்து தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்தினார்.
பகல் கனவான வெற்றி:
எப்படியும் சொந்த ஊரில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பகல்கனவு கண்ட பாலுவிற்கு பலித்ததோ வேறு.உள்ளதும் போனது கதையாக தாய் மண்ணான தஞ்சாவூரும் அவர் காலை வாரிவிட்டதுதான் இப்போது திமுகவினரிடம் நிலவும் ஹாட் டாக்.