வாக்கு எண்ணிக்கை குறித்த டி.ஆர் பாலு மனு: தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: லோக்சபா தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்ற டி.ஆர்.பாலுவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒருவார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. எம்.பி.யும், தஞ்சாவூர் லோக்சபா தொகுதி வேட்பாளருமான டி.ஆர். பாலு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
லோக்சபா தேர்தலில் வாக்குபதிவின்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. வாக்குப் பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் ஒட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர்.
அதற்கு தி.மு.க. சார்பில் பல புகார்கள் தெரிவித்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மே 16-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை நடவடிக்கை நேரடியாக நடைபெற வேண்டும். எனவே வாக்கு எண்ணப்படும் ஒவ்வொரு மேஜைகளிலும் வீடியோ கேமரா பொருத்த வேண்டும்.
மேலும், ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது, கண்காணிப்பாளர், நுண்பார்வையாளர், வேட்பாளர் ஆகியோரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையாக இருக்கும் வகையில், இணையதளத்தின் வாயிலாக நேரடி ஒளிபரப்புச் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் விடுதலை, தலைமை கழக வக்கீல்கள் பரந்தாமன், நீலகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
அவர்கள் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ‘‘இந்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை விடுமுறை கால நீதிமன்றம் வருகிற 7-ந்தேதி விசாரிக்கும் என்றும்'' நீதிபதிகள் உத்தர விட்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, சட்டமன்றத் தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அதிமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறினார். வாக்கு எண்ணிக்கையின் போது இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவே வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் டி.ஆர்.பாலு கூறினார்.