முதல்ல அரசாணையை நல்லாப் படிங்க.. அப்புறம் பேசுங்க.. பொன்னாருக்கு டி.ஆர்.பாலு பொளேர் பதில்!
மைல்கற்களில் இந்தியை எழுதச் சொன்னதே அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுதான் என்று சொன்ன இப்போதைய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை டி.ஆர். பாலு கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை: அரசாணையை படித்துப் பார்த்துவிட்டு பொன். ராதாகிருஷ்ணன் பேச வேண்டும் என்று டி.ஆர். பாலு காட்டமாக பேசியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்களில் தமிழில் உள்ள ஊர் பெயர்கள் அழிக்கப்பட்டு இந்தியில் எழுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் உருவாகியுள்ளது.
கடும் கண்டனத்தை எதிர்கொள்ள முடியாத மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், டி.ஆர். பாலு மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் இந்தி மொழியில் எழுத வேண்டும் என்று அரசாரணை பிறப்பிக்கப்பட்டது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
வம்புக்கு இழுக்க..
இதனை கடுமையாக கண்டித்துள்ளார் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு. மேலும் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தாரக மந்திரத்தை மனதில் தாங்கி பணியாற்றுகின்ற தன்னை, வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று பொன். ராதாகிருஷ்ணனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சரியா படிங்க
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது வெளியிட்ட அரசாணையை முதலில் பொன். ராதாகிருஷ்ணன் சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும். அதனை சரியாக படிக்காமலேயே இப்படி அவதூறு பேசி வருகிறார் என்று டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
ஜெ. கடிதம்
மேலும், இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2004ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி, மத்திய அரசைக் கண்டித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், நெடுஞ்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், இந்தியில், பெயர்களை எழுதியுள்ளனர் என ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார்.
அரசாணை
அதற்கு பதிலளிக்கும் வகையில், 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக குறிப்பாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், எல்லை மைல்கற்களிலும், அந்தந்த மாநில மொழி கட்டாயம் இடம்பெறுவதோடு, அவற்றையே முதன்மைபடுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழ்
மேலும், மாநில மொழிகளைத் தொடர்ந்து, ஆங்கிலமும், அதைத் தொடர்ந்து, ஒன்றாவது, மூன்றாவது, ஏழாவது மைல்கற்களில் இந்தியும் இடம்பெறலாம் என்றும் குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டது. மைல்கற்களில், தமிழ் மொழியில், ஊர்ப் பெயர்கள் கட்டாயம் இடம்பெறுவதோடு, அதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.