சுவிஸ் வங்கி பணத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்தது? டி.ராஜேந்தர் கேள்வி
சுவிஸ் வங்கி பணத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை: சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு கொண்டுவர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அன்று நள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நாடு முழுவதும் செல்லாதவையாக ஆகின. இதைத்தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போது புழக்கத்திற்கு வந்துள்ளன.
இருப்பினும் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் வங்கிகள் முன்பு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்தார். அதேநேரம் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பண பட்டியல் ஏன் வரவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.