என்ன செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.. டி.ஆர் பொளேர் கேள்வி!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத மோசமான ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் எதுவும் செய்யாமல் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னதான் செய்து கொண்டிருக்கிறார் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினின் செயல்பாடு அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையே இன்று டி.ராஜேந்தரும் பிரதிபலித்துள்ளார்.
சென்னையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு தனது கட்சியினருடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் விஜய டி.ராஜேந்தர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் வரலாறு காணாத மோசமா ஆட்சி, ஒரு காட்டாட்சி நடந்து வருகிறது. ஆனால் 89 எம்.எல்ஏக்களை வைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என்றார் விஜய டி.ராஜேந்தர்.
திமுகவைச் சேர்ந்த அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் ராஜினாமா செய்து பெரும் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஜெயலலிதா இறந்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்ட சமயத்திலேயே இதை திமுக செய்திருக்க வேண்டும் என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது. ஆனால் இதுவரை திமுக அதுபோல எதையுமே செய்யவில்லை.
மாறாக மக்கள் பிரச்சினைகளில் வழக்கம் போல ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி என்ற அளவில் மட்டுமே திமுக தனது எதிர்ப்புகளை பொத்தாம் பொதுவாக காட்டி வருகிறது. இந்த நிலையில்தான் இதைச் சுட்டிக் காட்டும் வகையில் டி.ராஜேந்தர் இதுபோல கூறியுள்ளார்.
டி ராஜேந்தரின் கேள்விகளுக்கு திமுகதான் பதில் சொல்ல வேண்டும்.