ஜிஎஸ்டியால் தமிழ் திரைப்படங்களுக்கு ஆபத்து.. குரல் கொடுக்கும் டி. ராஜேந்தர்
ஜி.எஸ்.டி வரியால் தமிழ் திரைப்படங்களுக்கு ஆபத்து உருவாகியுள்ளது என்று நடிகர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிப் படங்கள் அழியும் ஆபத்து உருவாகியுள்ளதாக திரைப்பட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் பேசும் போது, தமிழகத்தில் கேளிக்கை வரி இல்லை. என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடவில்லை. இந்த நிலையில், திரைப்படத்திற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தால் சின்ன பட்ஜெட் படங்கள் எப்படி ஓடும் என்று கேள்வி எழுப்பினார்.
இவ்வளவு வரியை சுமத்தினால் தியேட்டருக்கு எப்படி மக்கள் வருவார்கள் என்று கேள்வி எழுப்பிய ராஜேந்தர், தியேட்டரில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்றும், பார்கார்ன், கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும் மிக அதிகமாக உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு தற்போது விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிப் படங்கள் அழியும் ஆபத்து உருவாகியுள்ளது. எனவே, ஜி.எஸ்.டி.க்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவேன் என்று டி. ராஜேந்தர் கூறினார்.