கொள்கை வேறாக இருந்தாலும் கமல் ஒரு பண்பாளர்... சபாஷ் போடும் டி.ராஜேந்தர்!
புதிய அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் கமல் சிறந்த பண்பாளர் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : அரசியல் கட்சி தொடங்குவதற்காக ராமேஸ்வரம் புறப்படும் முன்னர் கமல்ஹாசன் தன்னிடம் தொலைபேசியில் உரையாடியாதாக லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். கொள்கைகள் வேறாக இருந்தாலும் கமல் ஒரு சிறந்த பண்பாளர் என்பதற்கான அடையாளமாகத் தான் என்னை சந்தித் பேச விரும்பினார் என்று டி. ராஜேந்தர் பாராட்டியுள்ளார்.
சென்னையில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய உருவபடத்திற்கு டி. ராஜேந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், ராமேஸ்வரம் செல்வதாகவும் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.
நீண்ட நேரம் கமல் என்னிடம் தொலைபேசியில் பேசினார், நேரில் சந்திக்க விரும்புவதாக சொன்னார். ஆனால் குறுகிய காலம் மட்டுமே இருந்ததால் மதுரை கூட்டத்தை முடித்துவிட்டு வந்து சந்திப்பதாக சொன்னார். அவருக்கும் எனக்கு கொள்கை ரீதியாக பல முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் அவரிடம் நல்ல பண்பாடு இருக்கிறது.
பாராட்டத்தக்க பண்பாடு
கட்சி தொடங்கும் போது கமல் என்னிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்னை மதித்து பேச வேண்டும், சந்திக்க வேண்டும் என்று கமல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் அப்படி சொன்னார் என்றால் அது தான் அவருடைய பண்பாட்டின் வெளிப்பாடு.
அதிமுகவை ஆதரிக்காததால்
ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே நான் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்கவில்லை என்பதால் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு லட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தை அரசு அழைக்கவில்லை.
ஆட்டிவைப்பது யார்?
இந்த அரசை ஆட்டிவைப்பது யார். இவர்கள் யார் பேச்சை கேட்டு இயங்குகிறார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆர்கே நகர் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அந்தக் கட்சியில் நிலைமை இல்லை என்பதாலேயே லட்சிய திமுக ஆதரவளிக்கவில்லை, இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைக்காமல் இருக்கலாமா.
அரசியல் வாழ்க்கையில் புதிய கட்டம்
வருகிற புதன்கிழமை என்னுடைய அரசியல் வாழ்க்கையில் புதிய கட்டத்தை, புதிய கோணத்தை, புதிய பாதையை செய்தியாளர்களிடம் விளக்கிக் கூற உள்ளேன். இது வரை சிந்தித்துக் கொண்டே இருந்த டி. ராஜேந்தர் இனி சிரித்துக் கொண்டே அரசியலை நடத்த உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.