தமிழக மக்களை வாழவைக்க நாளை முக்கிய முடிவு... அனல் கிளப்பும் டி.ராஜேந்தர்!
தமிழக மக்களை வாழவைக்க நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: தமிழக மக்களை வாழவைக்க நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ நிச்சயம் என்னுடைய முடிவில் தடுமாற்றம் இருக்காது என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப பிப்ரவரி 28ல் முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று டி. ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது : திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து பேசியுள்ளேன். புதன்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் ஒரு முடிவை தெரிவிக்கப் போகிறேன் என்று கூறினேன், அது பற்றியே மக்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர்.
நாளை முக்கிய முடிவு
தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இதற்காக நான் நாளை அரசியலில் ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளேன். நிச்சயமாக என்னுடைய அரசியல் முடிவால் மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ, முடிவில் தடுமாற்றம் இருக்காது.
எழுச்சி தரும் திருச்சி
வாழ்க்கையில் எழுச்சி வேண்டுவோருக்கு திருச்சி வேண்டும், திருச்சி மலைக்கோட்டையை வைத்து தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிடிக்க முடியும். திருச்சியில் தான் அரசியல் கட்சியினர் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். 14 ஆண்டுகளாக லட்சிய திமுகவை நடத்தியவன், 34 ஆண்டு அரசியல் அனுபவம் எனக்கு இருக்கிறது. அடிப்படை தகுதிகள் பல இருந்தாலும் இன்றைக்கு இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்ப முக்கிய முடிவை எடுக்கிறேன். எம்ஜிஆர் காலத்தையும், டி.ராஜேந்தர் காலத்தையும் பார்த்திருப்பீர்கள், இது எஸ்டிஆர் காலம்.
யாரோடு கூட்டணி சேரக்கூடாது
அரசியலுக்கு புதியவர்கள் வரட்டும், இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருந்தாலும் கரைபடாத அரசியல்வாதி என்று பாராட்டப்பெற்றவன். யாரோடு வைக்கப்போகிறோம் கூட்டு என்பதைவிட யாரோடு கூட்டு வைக்கக் கூடாது என்பதை தான் நான் சொல்லப்போகிறேன். நம்மை யார் ஒப்பு கொள்கிறார்கள் என்பதை விட நம்மை யார் ஒப்பு கொள்ளமாட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
களத்தில் இறங்கும் அரசியல்வாதி
என்னுடைய முடிவு என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். என்னையும் என் மகனையும் ஆளாக்கியவர்களுக்கு நல்லது செய்வேன். நான் போஸ் கொடுத்துவிட்டு கையாட்டிக் கொண்டு போகிறவன் அல்ல, நினைத்த மக்களுடன் கைகுலுக்கி கையெடுத்து கும்பிடுபவன். 3 நாட்களில் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் முதல்வராக விரும்புகின்றனர்.
சிம்பு அறிவுள்ளவர்
கடவுள் முருகன் போல அறிவாற்றல் மிக்கவன் சிலம்பரசன், ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களுக்கு தைரியமாக ஆதரவு கொடுத்தவர். மாணவர்கள் மீது கைவைத்த போலீசாரை கண்டித்து பேசியவர்.
அரசியலில் யார் ஜெயிப்பார்கள்?
ஜாதகம் யாருக்கு நன்றாக இருக்கிறதோ அவர்கள் அரசியலில் ஜெயிப்பார்கள். அரசியலுக்கு வருவோர் எடுக்கும் முடிவுகள் மக்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் ஜெயிக்க முடியாது என்றும் டி.ராஜேந்தர் கூறினார்.