இனி திமுக பாடு...ஸ்டாலின் பாடு... என் வழி... தனி வழி: டி. ராஜேந்தர் உருக்கம்
அரசியலில் தாம் புதிய பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன் என அறிவித்திருக்கிறார் டி ராஜேந்தர்.
Recommended Video
சென்னை: அரசியலில் தாம் புதிய பிள்ளையார் சுழி போட்டிருப்பதாகவும் இனி தன் வழி தனிவழி எனவும் டி. ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் கூறியதாவது:
தமிழக அரசியலில் எம்ஜிஆர் இல்லை. அவர் கொள்கைகளைத் தாங்கிபிடித்த அதிமுகவின் ஜெயலலிதாவும் இந்த கால கட்டத்தில் இல்லை. திமுக தலைவர் கருணாநிதி உடல் ரீதியாக சற்று பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கருணாநிதியிடம் ஆசி பெற்று சிலர் புதிதாக கட்சி தொடங்குகின்றனர். இது காலத்தின் கட்டாயம். இந்த நிலையில்தான் நினைவுபடுத்த விரும்புகிறேன் ஒரு சில பழைய அத்தியாயம்.
கருணாநிக்காக திமுகவில்
எம்ஜிஆர் கால்த்தில் 13 ஆண்டுகள் பல தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியாமல் கருணாநிதி இக்கட்டாக இருந்த காலகட்டத்தில் 1984-ம் ஆண்டு எனது 28-வது வயதில் கருணாநிதி முடங்கிவிடக் கூடாது என்பதற்காக அவரது தொண்டனாக எனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவன். திமுக கொள்கை பிரச்சார பீரங்கியாக அண்ணா நகர், மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் உப்பிலியாபுரம் இடைத் தேர்தலில் தொடங்கி பல மேடைகளில் முழங்கியவன்.
கருணாநிதிக்கு ஆதரவாக போராட்டங்கள்
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது சென்னை பாண்டிபஜாரில் தர்ணா போராட்டம் நடத்தினேன். ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்டபோது மத்திய சிறைச்சாலை வாசலில் சீற்றம் கொண்டு சீறிப் பார்த்தவன்.
கருணாநிதியின் பாராட்டு
மதிமுகவை வைகோ தொடங்கி திமுகவை உடைத்த போது கருணாநிதி என்னை அழைத்தபோது, 7 ஆண்டுகளாக நடத்திய தாயக மறுமலர்ச்சி கழகத்தை திமுகவுடன் இணைத்தவன். என்னை தம்பி டி ராஜேந்தர் என் வயதிலும் என் திறமையிலும் என்னில் பாதி என்றவர் கருணாநிதி. இந்த வார்த்தை ஒன்றே போதும். இந்த திருப்தியோடே என் வாழ்நாள் ஓடும். என் குருவாகிய கருணாநிதி என்ற துரோணாச்சாரியாரால் சிஷ்யனாக ஏற்கப்பட்டவனே இந்த டி.ஆர். துரோணாச்சாரியார் அர்ச்சுனனை அவரது சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது மகன் அஸ்வத்தம்மா அர்ச்சுனனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் மகாபாரதம். நவீன பாரதத்திலும் கூட எல்லாவற்றுக்கும் காரணம் கர்மா. என்னை படைத்த பிரம்மா, என் வாழ்விலும் யாராவது இருக்க வைத்தாயா அஸ்வத்தம்மா?
இனி என்வழி தனிவழி
ஆண்டவன் அருளால் என் அரசியல் வாழ்வு ஆகிவிடக் கூடாது சும்மா. எனக்கு வழிகாட்டட்டும் நாடறிந்த நால்வரின் ஆன்மா. அதில் மூன்று முதல்வர்கள் சம்பந்தப்பட்டது நான் சார்ந்திருக்கும் சினிமா. அதனால்தான் டி.ஆரின் லட்சிய திமுக கடித ஏடு தொகுப்பினை போட்டிருக்கிறேன். ஈரோட்டு தந்தை பெரியாரோடு, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஏன் என்றால் திமுகவுக்காக பலகாலம் உழைத்த எம்ஜிஆர் திமுகவிலேதான் இருக்க வேண்டும் என தாக்கு பிடித்து பார்த்தார். முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் தூக்கி எறியப்பட்டார். ஒருவிதத்தில் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் ஒரு நிலைமை. இப்போதுதான் என்னால் உணர முடிகிறது. அன்றைக்கு அவருக்கு ஏற்பட்ட வலி, என் கண்ணில் தெரிகிறது. அவர் ஏற்படுத்திய வழி இப்போதுதான் எனக்கு திறக்கிறது ஞான விழி. இறைவன் அருளாள் போடப்போகிறேன் புதிய பிள்ளையார் சுழி. இனி என்வழி..தனிவழி..
தத்து பிள்ளை நான்
என் பார்வையில் இன்றைய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திமுக என்றாகிவிட்டது. இனி திமுக பாடு... அது ஸ்டாலின் பாடு.. அவர் செய்த பாக்கியம் அவர் கருணாநிதி பெற்றெடுத்த பிள்ளை. நானோ கருணாநிதி கண்டெடுத்த தத்துப் பிள்ளை. ஒருவிதத்தில் பார்த்தால் நான் திமுகவுக்குய் பயன்பட்டு தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை! பரவாயில்லை. தந்தை பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் பெற்றெடுத்த பிள்ளைகள் இல்லை. இந்த நால்வர் ஆன்மாக்களின் நல்ல கொள்கைகளுக்கு நான் ஒரு தத்துப் பிள்ளை.