ஓபிஸ் அறிக்கை விட்டாரா இல்லை குறட்டை விட்டாரா? டி. ராஜேந்தர் காட்டம்
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கடைசி நேரத்தில்தான் தமிழக அரசு முயற்சி எடுத்தது என்று டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கடைசி நேரத்தில்தான் தமிழக அரசு முயற்சி எடுத்தது என்று டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கைவிட்டாரா இல்லை குறட்டை விட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக முதல்வர் ஓபிஎஸ் அறிக்கைவிட்டாரா இல்லை குறட்டை விட்டாரா என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொங்கல் நெருங்கி வரும் வேலையில் ஜல்லிக்கட்டுத் தொடர்பாக இடைக்காலத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததோடு, ஜல்லிக்கட்டுத் தொடர்பான தீர்ப்பு எழுதப்பட்டுக் கொண்டிருப்பதால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து டி. ராஜேந்தர் கூறியதாவது:
இளிச்சவாய் தமிழர்கள்
ஜல்லிக்கட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை குறை கூறும் பாஜக, ஏன் ஜல்லிக்கட்டை நடத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் காலதாமதம்? தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறார்கள். தமிழர்களை கிள்ளுக் கீரையாக கருதுகிறார்கள்.
ஏன் தாமதம்?
தீர்ப்பு ஏன் எழுத தாமதமாகிறது? ஏன் முன் கூட்டியே எழுத முடியாதா? காளை மாட்டை ஏன் காட்சிப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். அகற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை இல்லையா? அவசரச்சட்டம் கொண்டு வந்து நீக்காதது ஏன்?
ஓபிஎஸ் குறட்டை
மத்திய அரசு ஏன் இத்தனை நாட்கள் காலம் கடத்தியது? கடைசி நேரம் காக்க வைத்திருந்துவிட்டு கழுத்தை அறுக்கும் வேலையை செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி அறிக்கை விட்டார். அவர் அறிக்கை விட்டாரா அல்லது குறட்டை விட்டாரா என்பது தெரியவில்லை.
என்ன செய்தார் 50 எம்பிக்கள்?
இத்தனை எம்பிக்களை வைத்துள்ள அதிமுக இத்தனை நாள் வரை என்ன செய்தது? ஜல்லிக்கட்டு விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனை பச்சை தண்ணீர் ஊற்றி அணைக்க முடியாது. ஆக. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.