எடக்கு மடக்காக கேள்வி கேட்ட செய்தியாளர்.. அடுக்கு மொழியில் போட்டுத் தாக்கிய டிஆர்.. வீடியோ
ஆர்பாட்டத்திற்கு வெறும் 50 பேர் மட்டுமே வந்திருக்கார்களே என செய்தியாளர் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த டி.ராஜேந்தர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு இறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய டி.ராஜேந்தர் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆத்திரத்துடன் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து டி.ராஜேந்தர், தன்னுடைய லட்சிய திமுக கட்சியின் சார்பாக,சென்னை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், 'ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் கூட்டத்தைக் காணவில்லையே' என கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த டி.ராஜேந்தர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவரிடம் சண்டைபோடுவது போல் வரிந்து கட்டிக்கொண்டு சென்றார்.
மேலும், வழக்கம் போல் அடுக்குமொழியில், 'இது காசுக்காக வந்த கூட்டம் அல்ல. என் பேச்சுக்காக வந்த கூட்டம். நான் மக்களை திரட்டவில்லை. என் தொண்டர்களை, அபிமானிகளைத் திரட்டியுள்ளேன். பிரியாணியாக வந்த கூட்டமல்ல, என் மேல் உள்ள பிரியத்துக்காக வந்த கூட்டம்.
இது குவார்ட்டருக்காக வந்த கூட்டம் அல்ல. என் மேட்டருக்காக வந்த கூட்டம்' என ஆவேசமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் இப்போது செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ஆவேசப்படுவது அதிகரித்து வருகிறது.