சென்னை கலெக்டர் திட்டியதால் தாசில்தார் தற்கொலை முயற்சி- வருவாய்துறையினர் போராட்டம்
சென்னை: அதிகாரிகள் முன்னிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி திட்டியதால் மனமுடைந்த தாசில்தார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கோரி ஏராளமான அதிகாரிகள், ஊழியர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்த பலத்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி ஆகியவற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளில் மாநகராட்சியினரும், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு, வீடு இழந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதற்கான கணக்கெடுப்பு பணியில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினந்தோறும் கணக்கெடுப்பு செய்யும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், தாங்கள் கணக்கெடுத்த விவரங்களை, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வெள்ள நிவாரண தடுப்பு பணி அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும். அங்கு விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படும். இதில் சென்னை மாவட்டத்தில் தாசில்தார், வருவாய் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பணிகள் ஒருங்கிணைப்பாளரான தண்டையார்பேட்டை தாசில்தார் சத்தியபிரசாத், 52 பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை வெள்ள நிவாரணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி, பிற மாவட்ட ஊழியர்கள் முன்னிலையில் தாசில்தார் சத்யபிரசாத்தை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் பணி சம்பந்தமாக அவரை டார்ச்சர் செய்ததாகவும் கூறப்படுகிறது.
தரக்குறைவாக திட்டியதோடு உன்னை தொலைத்துக்கட்டி விடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் அவமானம் அடைந்த சத்தியபிரசாத், தேம்பி தேம்பி அழுதுள்ளார். அவரை, மற்ற அதிகாரிகள் சமாதானப்படுத்தி உள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அழுது கொண்டிருந்த சத்தியபிரசாத், பாத்ரூம் சென்று வருவதாக கூறி அங்குள்ள கழிவறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் வெளியே வராததால் உடன் சென்றவர், கழிவறை கதவை தட்டி பார்த்துள்ளார். திறக்காததால் உடைத்து பார்த்தபோது, கழிவறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்ய சத்தியபிரசாத் முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை 3 மணி வரை சிகிச்சையில் இருந்த சத்தியபிரசாத்தை, அதிகாலை 4 மணியளவில் வில்லிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கும், அவர், எனது மானமே போய் விட்டதே என சக ஊழியர்களிடம் புலம்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆலோசனை செய்த வருவாய் அதிகாரிகள், ஊழியர்கள் 200 பேர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். அதிகாரிகளின் உயிரோடு விளையாடும் கலெக்டரை மாற்றம் செய்ய கோரி கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஏராளமான வருவாய் துறை ஊழியர்களும் பங்கேற்றனர்.
ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். உயரதிகாரியிடம்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என போராட்டக்காரர்கள் கூறி மறுத்ததோடு, தொடர்ந்து போராட்டம் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியர் சுந்தரவல்லி அடாவடி செய்வதாகவும், அவரை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியர் சுந்தரவள்ளி நேரில் வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தற்கொலைக்கு முயன்ற சத்யபிரசாத்திடம் மன்னிப்பு கோருவதாக அவர் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.