போலி நம்பர் பிளேட் தயாரிப்புக்கு ”ஆப்பு” – கடும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: வாகனங்களுக்கு போலியாக உயர் பாதுகாப்பு எண் பலகைகள் தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கேப்டன் சந்தோஷ் என்பவர் தொடர்ந்த வழக்கானது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் வாகனங்களுக்கான உயர் பாதுகாப்புப் பலகைகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
விசாரணையின் போது, மத்தியக் குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் நல்லசிவம், கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் (சட்டம் - ஒழுங்கு) ஆகியோர் நேரில் ஆஜராகி விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள், "தற்போது வரை போலி உயர் பாதுகாப்பு வாகன எண் பலகை தயாரிக்கும் 19 நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து நான்கு இயந்திரங்கள், 1,204 போலி உயர் பாதுகாப்பு வாகன எண் பலகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை மட்டுமின்றி அனைத்து நகரங்களிலும் இந்தப் பிரச்னை நிலவுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் போலீஸார் கூடுதல் கவனம் செலுத்தாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
விசாரணையை விரைவு படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். உயர் பாதுகாப்பு வாகன எண் பலகை தயாரிக்க இதுவரை சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படவில்லை என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சட்ட விரோதமான வாகன எண் பலகையைக் கண்டுபிடிப்பதற்கான முறையில் குறைபாடு உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் ஆணையர் இந்த விவகாரத்தில் தவறு செய்பவர்களைக் கண்டுபிடிப்பது போக்குவரத்து காவல் துறையின் கடமையாகும். இருந்தாலும், இந்தப் பணியை மத்திய குற்றப்பிரிவு துறை மேற்கொள்கிறது என்கிறார்.
மிகப் பெரிய சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளை நாங்கள் கண்டறிய விரும்புகிறோம். அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை டிஜிபி மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான அறிக்கையை டிஜிபி நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.