பாஜக கூட்டணி 333 இடங்கள் வெல்லும்… அதிமுக 33 இடங்களை கைப்பற்றும்- இது ஜோதிடர்கள் கணிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமராவது உறுதி என்றும் ஜோதிடர்கள் தங்களின் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என பல வித கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 806 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.5 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 73 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது.
இதில் 55 பெண் வேட்பாளர்களும், 1 திருநங்கை வேட்பாளரும் அடக்கம். தேர்தலுக்காக 65000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 42 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நம்பர்களை வைத்து வெற்றிபெறும் தொகுதிகளை கணக்கு போட்டு கூறியுள்ளனர் ஜோதிடர்கள். அதாவது பொதுப்படையாக தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் அதிமுக 20 முதல் 32 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பாஜகவுக்கு 333
மோடி நிச்சயம் பிரதமராவார் என்று ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் என்ற ஜோதிடர் அடித்துக்கூறுகிறார். அதுமட்டுமல்லாது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு 333 இடங்களும், அதிமுகவிற்கு 33 இடங்களும் கிடைக்கும் என்கிறார் உறுதியாக. எல்லாம் ஒரு கணக்குதானாம்.
ஜெ.பிரதமராக வாய்ப்பு
அதே சமயம் சுரேஷ் ஆழ்வார் என்ற ஜோதிடரோ, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமராகும் வாய்ப்புகள் கணிந்துள்ளதாக கூறுகிறார். எண் கணிதப்படி பார்த்தால் மோடியை விட ஜெயலலிதாதான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்கிறார். காரணம் மோடியின் பிறந்த தேதி 17 கூட்டுத்தொகை 8 என்பதால் இந்த கணக்காம்.
வலுவான கூட்டணி பாஜக
''இந்தத் தேர்தல் பாஜகவிற்கு அதிகபட்ச வெற்றியை அள்ளித் தரும் தேர்தலாக இருக்கும். மோடியின் ஜாதகம் வலுவாக இருப்பதால், தமிழக பி.ஜே.பி. கூட்டணிக்கு புதிய வாக்காளர்களின் வாக்குகளால் 10 முதல் 15 நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்திய அளவில் இந்தக் கூட்டணி மூன்றில் இரு மடங்கு தொகுதிகளைக் கைப்பற்றும். பி.ஜே.பி. தனிப் பெரும்பான்மையும் பெறும் என்று கூறியுள்ளார் ஜோதிடர் கே.பி.வித்யாதரன்.
பாஜக ஆட்சி உறுதி
செவ்வாயும் குருவும் நட்சத்திர சார பரிவர்த்தனைப் பெற்றிருப்பதாலும், லக்னமும் லக்னாதிபதியும் குரு சாரம் பெற்றிருப்பதாலும், பாரதப் பிரதமராகும் வாய்ப்பு இவருக்குப் பிரகாசமாக உள்ளது. இந்தியாவின் சுதந்திர தின ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போதும்,பாஜக ஆட்சியில் அமரும் வாய்ப்பு உள்ளது.
5 ஆண்டுகள் நீடிக்கும்
பதவி ஏற்று செப்டம்பர் மாதம் வரை கடுமையான சவால்கள், பிரச்னைகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை புதிய அரசு சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். பல சவால்களை கடந்தும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வார் என்றும் கூறியுள்ளார் வித்யாதரன்.
காங்கிரஸ் படு தோல்வி
ராகுல்காந்திக்கு சந்திர தசையில் புதன் புத்தி நடைபெறுகிறது. சந்திரன் நீசபங்க ராஜயோகம் அடையாமல் நீசம் மட்டும் பெற்றிருப்பதால், இந்தத் தேர்தலில் இவரை முன்னிலைப்படுத்தும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவும். 100 இடங்களில் வெற்றி பெறுவதே கடினம்.
ராகுல்காந்திக்கு முக்கியத்துவம்
ஆனாலும், தற்சமயம் புதன் புத்தி நடைபெறுவதால், காங்கிரஸ் கட்சியில் இவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். இவரைப் பிரதானப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகள் நாடெங்கும் பின்னர் மாற்றம் செய்யப்படுவார்கள்.
அரசியலில் பிரியங்கா
ராகுலின் ஜாதக அமைப்பைப் பார்க்கும்போது சகோதரி பிரியங்காவுக்கு 10.11.2017 முதல் செவ்வாய் தசை தொடங்குவதால், அவர் அதுமுதல் தீவிர அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.''
அதிமுக வெற்றி வாய்ப்பு
ஜெயலலிதா தன் சிம்ம ராசிக்கு சந்திராஷ்டம நாளில் பிரசாரத்தைத் தொடங்கியதாலும், தற்சமயம் பாதகாதிபதி தசை நடைபெற்று வருவதாலும் 40 என்ற இலக்கை எட்ட முடியாமல் போகிறது. அதேசமயம் குரு லாப வீட்டில் நிற்பதால், கௌரவமான வெற்றியை இவரால் பெற முடியும். அ.தி.மு.க-வுக்கு 13 முதல் 18 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது.''
திமுகவிற்கு 8 தானாம்
கருணாநிதிக்கு சூரியன், சந்திரன் பலமாக இருப்பதால், மூன்று தலைமுறையைத் தாக்குப்பிடிக்கும் சக்தி இவருக்குக் கிடைத்துள்ளது. தேர்தல் நாளன்று ஜென்மத் தாரையில் சந்திரன் செல்வதால், தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. நான்கு முதல் எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.''
தேமுதிகவிற்கு கடினம்
''சித்திரை நட்சத்திரம், துலா ராசியில் பிறந்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ராசிக்கு 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், இந்தத் தேர்தலில் ஒருசில இடங்களைப் பிடிப்பதே கடினம். ஆனால், அவருக்கு 9-ல் குரு நிற்பதால், அவரது கட்சிக்கு ஒரு கௌரவம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் ஜோதிடர் வித்யாதரன்.
அமைச்சரவையில் இடம்
அதேசமயம் சில ஜோதிடர்கள், தேமுதிகவிற்கு ஒருசில தொகுதிகளில் வெற்றி கிட்டும் என்றும் தேமுதிக தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைப்பது உறுதி என்றும் கணித்துள்ளனர்.
மதிமுக வைகோ:
''குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ம் இடமாகிய கடக ராசியில் உச்சம் பெறுகிற காரணத்தினால், வைகோவிற்கு புதிய தெம்பு, ஆரோக்கியம் மற்றும் பதவிகள் உட்பட பல நன்மைகள் ஏற்படும் என்கிறார் மாயவரம் ராமேஸ் சுவாமிகள்.
நாட்டிற்கு நன்மை
சனிப்பெயர்ச்சியும் வைகோவிற்கு மிகப்பெரிய நன்மைகளை உண்டாக்க காத்திருக்கிறது. 2015-ம் ஆண்டு புதன் தசை ஆரம்பிக்கும் காரணத்தால், இவர் ஜாதகத்தில் புதன் வலுப்பெறுவதால், தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். இவரால் இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால், நட்பு வட்டாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.''
யார் கணக்கு ஜெயிக்கும்
ஊடகங்களின் கருத்துக்கணிப்பு, ஜோதிடர்களின் கணிப்பு அனைத்துமே பாஜக, அதிமுகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. சொல்லிவைத்தார்போல் தேமுதிகவிற்கு கஷ்டதிசை என்றுதான் ஜோதிடர்களும் கூறியுள்ளனர். மக்கள் கணக்கு இத்தோடு ஒத்துப்போகிறதா எனப் பார்க்க இன்னும் சில மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும். ஒருவேளை எண்ணிக்கை மாறினால், அப்போது இந்த ஜோதிடர்கள் என்ன சொல்வார்களோ?