மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம்.. விஷால் அறிவிப்பு
மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சென்ற ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது கேளிக்கை வரி உயர்த்தப்பட்டது. இதனால் சினிமா டிக்கெட் விலை அதிகமாகியது. இதையடுத்து சினிமா பார்க்கும் வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு சினிமாவிற்கு விதிக்கும் வரியை குறைக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசுக்கும், பல்வேறு சினிமா சங்கங்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தது.
இந்த பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்படுவதாக கூறப்பட்டது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் கடந்த 8 நாட்களாக எந்த புதிய படத்தை வெளியிடவில்லை. இந்த நிலையில் மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறது.
திரையரங்குகள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளது. வேலை நிறுத்தம் குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம்.சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடக்காது. போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடக்காது.
மேலும் ''டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்சனையால் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது. சினிமா டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.'' என்றும் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.