47 நாட்களாக நடந்து வந்த சினிமா ஸ்டிரைக் வாபஸ்... விரைவில் படப்பிடிப்புகள் துவங்குகிறது
டிஜிட்டல் கட்டணம் உள்ளிட்டவற்றை எதிர்த்து 47 நாட்களாக நடந்து வந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வாபஸானது.
Recommended Video
சென்னை: டிஜிட்டல் சேவை கட்டணத்தை எதிர்த்து, தமிழ் திரையுலகத்தினர் கடந்த, 47 நாட்களாக நடத்தி வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தப் போராட்டத்தில் தமிழ் திரையுலகம் இணைந்தது. அதனால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. திரைப்படம் தொடர்பான டப்பிங், எடிட்டிங் என எந்த பணியும் நடக்காமல் இருந்தது.
இதற்கிடையில், கேளிக்கை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் தமிழில் புதுப்படங்கள் வெளியாகாததால், தியேட்டர்களில் பிறமொழி படங்களும், பழைய தமிழ் படங்களுமே வெளியிடப்பட்டன.
இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, டிஜிட்டல் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில், ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து புதிய படங்களை வெளியிடுவது குறித்தும், படப்பிடிப்பு துவங்குவது குறித்தும் அடுத்த சில நாட்களில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.