அன்புச் செழியன் வகையறா கட்டப் பஞ்சாயத்துகளை அடக்க துப்பில்லாமல் வெட்டி வசனம் பேசும் தமிழ் சினிமா!
அன்புச் செழியனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடியாத சினிமா சங்கங்கள் எதற்கு என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவையே மிரட்டி வைத்துக் கொண்டு அடுத்தடுத்த மரணங்களுக்கு காரணமாக இருக்கும் அன்பு செழியன் கும்பலை அடக்க துப்பில்லாமல் வெட்டி வசனம் பேசிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல் ரவுடிகளுடன் கை கோர்த்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தவர் அன்புசெழியன். மதுரை பகுதியில் வட்டி தொழிலில் ஈடுபட்டு வந்த அன்புசெழியன் சினிமா உலகுக்குள் நுழைந்து கந்துவட்டி தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அன்பு செழியன் ஆளும் கட்சிதான்.. இவரிடம் பணம் வாங்கியவர்கள் கந்து வட்டி கொடுமையால் இழந்தது எல்லாவற்றையும்தான்.
வக்கிர அன்புசெழியன்
முதுபெரும் தயாரிப்பாளர் ஜி.வி. தூக்கிட்டு மறைவதற்கு காரணமே அன்பு செழியனின் அடாவடி வக்கிரம்தான். ஆண்களையும் பெண்களையும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தி சொத்துகளை சூறையாடுவது என்பதுதான் அன்புசெழியனின் ஸ்டைல்.
வெட்டி பேச்சுதான்
தமிழ் சினிமாவில் அக்கப்போருக்கு ஆயிரம் சங்கங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே அன்புசெழியனுக்கு முன்னால் செல்லாக்காசுதான்.. சினிமாவிலும் மீடியாவிலும் வெட்டி வசனம் பேசமட்டுமே இந்த சினிமா சங்க நிர்வாகிகள் லாயக்கு என்கிறார்கள்.
ரம்பா, தேவயானி விவகாரம்
ரம்பா, தேவயானி பிரச்சனைகளின் போதும் கூட வெட்டி வம்பாளர்களாத்தான் சினிமா உலகம் இருந்தது. இப்போது அசோக்குமார் தெள்ளத் தெளிவாகவே அன்புசெழியன் எனும் எமனைப் பற்றி விவரித்து எழுதிவைத்துவிட்டு சென்றிருக்கிறார்.
அன்பு செழியன் பெயரை சொல்லலை
அசோக்குமார் மரணத்துக்கு அன்புசெழியன் தான் காரணம்.. . இப்போது கூட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வெளியிட்ட அறிக்கையில் தொடை நடுக்கத்துடன் அன்பு செழியனைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. இது எவ்வளவு வெட்கக் கேடானது என்று அன்புச் செழியனால் பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகிறார்கள்.
வேட்டை தொடருதே
அன்புச் செழியனிடம் விஷாலும் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் பலருக்கும் வந்துள்ளது. இப்படியானவர்கள் சங்கங்களின் பொறுப்புக்கு வந்து சும்மா சவடால் மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதால்தான் அன்புசெழியன் போன்றவர்களின் வேட்டை தொடருவதாக சினிமா உலகிலேயே பேசுகிறார்கள்.
மரணங்கள் தடுக்கப்படனும்
இந்த கட்டப் பஞ்சாயத்து நபர்களை சட்டப்படி ஒடுக்குவதற்கு அத்தனை முழு முயற்சிகளையும் தமிழ் சினிமா உலகம் எடுத்தாக வேண்டியது பைரசி கொடூரத்தை விட முதன்மையானது. இதைச் செய்யாமல் போனால் அன்புச் செழியன் கும்பலால் அடுத்தடுத்த மரணங்கள் நிகழுவது நாம் தடுக்க முடியாததாகிவிடும்.