சாமளாபுரத்தை பதற வைத்த அதிர்ச்சிக் கொலை.. கொலையாளியின் ஷாக் வாக்குமூலம்
Recommended Video
திருப்பூர்: திருப்பூர் அருகே கணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக இரண்டரை வயது குழந்தையின் தலையில் கம்பால் அடித்தும் சாகாததால் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தேன் என தமிழ் இசக்கி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே தோட்டத்து சாலை வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். அவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களது இரண்டரை வயது மகள் ஷிவன்யாவை தமிழ் இசக்கி கொலை செய்துவிட்டார்.
இதையடுத்து அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில் நானும் கணவரும், குழந்தையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தோம். எனது கணவர் வந்ததும் வராததுமாக வெளியே அவசரமாக சென்றார். நானும் மகளும் மட்டும் வீட்டில் இருந்தோம். அப்போது எனது மாமியார் தனலட்சுமி வீட்டுக்கு வந்து குழந்தைக்கு புது துணி அணிவித்து தூங்க வைத்து விட்டு சென்றுவிட்டார்.
ஆத்திரம் தலைக்கேறியது
நேரம் ஆவதை அடுத்து கணவருக்கு 6 முறை போன் செய்தேன். அவர் போனை எடுத்து பேசவில்லை. 7-ஆவது முறை போன் செய்தபோது அவர் யாருடனோ வாட்ஸ் ஆப் காலில் பேசியது தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் எனது கணவர் அவரது செல்போனை யாரும் ஓபன் செய்யாதபடி லாக் செய்து வைத்துள்ளார். இதுவும் எனக்கு அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது. இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. இதனால் அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பிருப்பதை உணர்ந்த நான் இந்த உலகில் வாழக் கூடாது என முடிவு செய்தேன். அதனால் குழந்தையை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.
தற்கொலை
அதன்படி குழந்தையின் தலையில் ஒரு கொம்பால் ஓங்கி அடித்தேன். குழந்தை சாகாமல் அழுது கொண்டே இருந்தது. இதனால் 5 அடி உயரம் கொண்ட பிளாஸ்டிக் தொட்டியில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. அதில் குழந்தையை போட்டு அழுத்தி கொன்றேன். உடனே குழந்தை இறந்துவிட்டது. அவரை கட்டிலில் போட்டுவிட்டு தற்கொலை செய்ய முயன்றேன். அதற்குள் கணவர் வந்துவிட்டார்.
நம்பிய நாகராஜ்
உடனே சேலையை மின்விசிறியில் இருந்து கழற்றி விட்டு பீரோவில் வைத்து விட்டேன். அப்போது குழந்தை வாயில் நுரை தள்ளியதை கணவர் பார்த்துவிட்டார். உடனே மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து விட்டு, என்னையும் தாக்கி விட்டு சென்று விட்டான் என்று கூறினேன். இதை நாகராஜ் நம்பிவிட்டார்.
ஒப்புதல் வாக்குமூலம்
பின்னர் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நானும் நாகராஜும் அழைத்து சென்றோம். அப்போதுதான் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து மாமியார் தனலட்சுமி, மங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் என்னிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டேன் என்று தமிழ் இசக்கி வாக்குமூலம் அளித்தார்.