இரவில் சாட்டிங், செல்போனை நாகராஜ் லாக் செய்ததே சந்தேகம் அதிகரிக்க காரணம்- தமிழ் இசக்கி வாக்குமூலம்
Recommended Video
திருப்பூர்: இரவில் வீட்டுக்கு தாமதமாக வருவதும், செல்போனை லாக் செய்ததும் சந்தேகத்தை அதிகரித்ததால் குழந்தையை கொலை செய்தேன் என்று தமிழ் இசக்கி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே தோட்டத்து சாலை வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். அவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களுக்கு ஷிவன்யா என்ற இரண்டரை வயது மகள் இருந்தார்.
நாகராஜ் பனியன் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தை கொல்லப்பட்டு இருந்தது. இதுகுறித்து தமிழ் இசக்கியிடம் கேட்டபோது குழந்தையை யாரோ கொன்றுவிட்டதாக நாடகம் ஆடினார். இதையடுத்து போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்துள்ளார்.
தமிழ் இசக்கி வாக்குமூலம்
இதையடுத்து அவரிடம் மேலும் விசாரித்ததில் குழந்தையை தான்தான் கொன்றேன் என வாக்குமூலம் அளித்தார். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கூறுகையில் எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். எனது பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரை அடுத்த சாமளாபுரத்துக்கு குடிபெயர்ந்தனர்.
குழந்தை பிறந்தது
அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தேன். என் கடைக்கு அடிக்கடி செல்போன் ரீசார்ஜ் செய்ய நாகராஜ் வருவார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காரணமாக நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஷிவன்யாஸ்ரீ என்ற குழந்தை பிறந்தது.
சமரசம்
தினமும் வேலைக்கு செல்லும் நாகராஜ் இரவு நேரத்தில் தாமதமாக வருவார். அப்போது நான் போனில் அழைத்தாலும் போனை எடுக்கமாட்டார். மேலும் நான் அவரை போனில் அழைக்கும் போதெல்லாம் அவரது லைன் பிஸியாக இருக்கும். இதனால் அவருக்கு யாருடனாவது தொடர்பிருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது எங்களுக்குள் சண்டை வரும். எனது மாமியார் சமரசம் செய்து வைப்பார்.
நானும் குழந்தையும் மட்டும் இருந்தோம்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் மூவரும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தோம். அப்போது உடனே நாகராஜ் வெளியே சென்றுவிட்டார். நானும் குழந்தையும் மட்டும் இருந்தோம். அப்போது எனது கணவருக்கு 6 முறை போன் செய்தும் எடுக்காததால் குழந்தையை கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.