பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம், ஜெ.விடம் மனு: நடிகர் சங்கம் முடிவு
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி' தலைவர் ஜி.சிவா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
26 வருடச் சிறை...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 26 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். இவ்வளவு காலம் அவர்கள் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பது கொடுமையானது.
விடுதலை முயற்சி...
சுப்ரீம் கோர்ட்டு இந்த 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டிருந்தது. அப்போது, அரசு விரும்பினால் 435-வது பிரிவின் கீழ் இவர்களை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாநில அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டது.
முட்டுக்கட்டை...
ஆனால் மத்திய அரசு அதற்கு உடன்படவில்லை. இதனால் விடுதலையில் முட்டுக் கட்டை ஏற்பட்டது. 2 அரசுகளும் ஒருமித்த கருத்துடன் இருந்திருந்தால் அவர்கள் விடுதலை ஆகி இருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
நடவடிக்கை தேவை...
தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த நல்ல நேரத்தில் அந்த 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சட்டசபையில் தீர்மானம்...
ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க 161-வது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதனை பயன்படுத்தி தமிழக அமைச்சரவையை கூட்டி விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பவேண்டும். இதை செய்வதன் மூலம் 7 பேரும் விடுதலையாக வழி ஏற்படும்.
கோரிக்கை மனு...
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், திரைப்பட தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.
ஊர்வலம்...
முதல்வருக்கு அதற்கான நேரம் ஒதுக்கி தருமாறு கடிதம் எழுதப்படும். அவர் ஒதுக்கும் தேதியில் ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தின் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஈர்க்கப்படும்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.