யாரிடமும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத தமிழ் திரையுலகினரின் காவிரி போராட்டம்
பேசியபடி இருந்த மவுனவிரதம் இருந்த திரையுலகினரின் போராட்டம் எந்த தாக்கத்தை தரப்போவதில்லை.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை படு காமடியாக நடந்து முடிந்தது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் நாள்தோறும் ஒவ்வொரு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழ் திரையுலகமும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய இன்று சென்னையில் மவுன விரத போராட்டத்தினை துவங்கியது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டனர். வழக்கம்போல் இந்த போராட்டத்திலும் விரல் விட்டு எண்ணும் அளவில் நடிகைகள் காணப்பட்டனர். இதை மவுனப் போராட்டம் என்று நாசர் கூறியிருந்தார்.
இதுவா மவுன போராட்டம்?
மவுனம் என்பது ஆழ்நிலையில் அமைதியாக இருத்தல். அதாவது வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாதிருப்பதே. வாய்தானே பேசக்கூடாது என எழுதிக் காட்டுவதும், சைகையில் பேசுவதுமே சரியில்லை என்று ஆன்மீக பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், மவுன போராட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே நடிகர்-நடிகைகள் ஒருவருக்கொருவர் சிரித்து பேச துவங்கிவிட்டனர்.
கேலி கூத்தும்
ஒவ்வொரு இடமாக மாறி மாறிப் போய் உட்கார்ந்து ஜாலியாகப் பேசியதைக் காண முடிந்தது. ஒரு நடிகர், தனது செல்போனை பார்த்து தலை வாரிய காட்சியையும் கண்டோம். அதாவது உணர்வுப்பூர்வமான நிலையில் யாரையும் பார்க்க முடியவில்லை. கேமரா முன்பு என்ன செய்வார்களோ அதையேதான் இங்கும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உணர்வும் இல்லையே,,,
இந்த போராட்டத்தில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய கறுப்பு உடை அணிந்து வந்திருந்தனர். உடையில் மட்டும் எதிர்ப்பை காட்டினால் போதுமா? உணர்வில் காட்ட வேண்டாமா? ஏதோ நடிகர் சங்கம் கட்டளையிட்டுவிட்டதே என்பதற்காக சம்பிரதாயத்தின்பேரில் கட்டாயத்தின்பேரில் ஒன்றுசேர்ந்த மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தியது அவர்களது செய்கைகள். இவர்களைப் பார்க்க மக்கள் யாரும் வரவில்லை. மாறாக ரசிகர்கள்தான் அலை மோதினர். அதாவது வேடிக்கை பார்க்க.
வேதனை புரியுமா?
விசை ஒடிந்து, நாள்முழுதும் பாடுபடும் விவசாயியின் வேதனையை எத்தனை பேர் கண்கூடாக பார்த்திருப்பார்கள்? தமிழர்களின் உணர்வுகளை இவர்கள் எந்த அளவுக்கு புரிந்துவைத்திருந்தால், கப்சிப்பென ஒரு சத்தம் கூட இல்லாமல், உருக்கமாக, உணர்வுப்பூர்வமாக இவர்கள் அமர்ந்திருப்பார்கள். அதுவும் கூட ஒரு நாள் கூட இவர்களால் உட்கார முடியவில்லை.
பாராட்டு விழாவா?
கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் தற்கொலைகளை சம்பவங்களை படித்திருப்பார்களா? இது என்ன கெட்டு கெதர் நிகழ்ச்சியா? அல்லது திரைப்பட உலகின் பாராட்டு விழா கூட்டமா? நாங்களும் காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் சிரித்து பேசி விளையாடினால் பசியும், பட்டினியுமாய் செத்துகொண்டிருக்கும் விவசாயிக்கு என்ன நன்மை கிடைத்துவிட போகிறது?
உபயோகமும் இல்லை
இந்த சம்பிரதாய மவுன விரதத்தினால் மத்திய அரசுக்கு எந்தவித தாக்கம் ஏற்பட போகிறது? ஒரு தாக்கமும் வராது. நல்லதாக நாலு முழக்கம் கூட இடத் தெரியவில்லை. நறுக்கென்று யாரையும் கண்டிக்கவும் மனதில்லை. அத்தனை நடிகர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை வலுப்படுத்தவும் முடியவில்லை. நடிகர்கள் என்ற உச்சாணி கொம்பில் இருக்கும்வரை, தமிழகத்தில் என்ன களேபர நடந்தாலும் சரி, எத்தனை பேர் மண்டைய போட்டாலும் சரி, எவன் அடிச்சிட்டு செத்தாலும் சரி, சராசரி தமிழனுடனும், ஏழை விவசாயியுடனும் ஒன்றிணைந்து நடிகர்-நடிகைகளால் என்றும் பயணிக்கவே முடியாது என்ற செய்திதான் இந்த போராட்டத்தின் மூலம் மக்கள் அறிந்து கொள்ள முடிந்தது.