ஃபெஃப்சியுடன் மோதல்..வரும் 27 முதல் படப்பிடிப்புகள் ரத்து- தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
சென்னை : ஜூலை 27 முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து அனைத்து நிர்வாகிகளும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (ஃபெ ஃப்சி) இடையிலான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில், தொழிலாளர்கள் சம்மேளனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக புதிய ஊதிய உயர்வினை அறிவித்துள்ளனர்.
இது ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கும், பேரதிர்ச்சியாகவும், மன உளைச்சலையும் தந்துள்ளது. இதனால் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களும், தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டும், நசிந்து கிடக்கும் தயாரிப்புத் தொழிலின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், வருகிற 27-07-2015 திங்கட்கிழமை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் பேச்சுவார்த்தை முடிவடையும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
மற்ற விவரங்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அங்கத்தினர்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.