கலைஞானியை வார்த்தெடுத்த திரைஞானி கே.பாலச்சந்தர்... !
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பிறந்தநாள் விழா இன்று.
Recommended Video
சென்னை: கலைஞானி என்று அன்போடு அழைக்கப்படும் கமல்ஹாசனுக்கும், கே.பாலச்சந்தருக்குமான உறவு என்பது மிகப் பெரிய விஷயம். தந்தை - மகன் ஸ்தானம் மட்டுமல்லாமல், குரு - சிஷ்யனாகவும் இருவரும் வெளுத்து கட்டியவர்கள்.
அரும்பு மீசை முளைக்கத் தொடங்கிய கமலை, 1973-ம் ஆண்டு வெளிவந்த 'அரங்கேற்றம்' படத்தில், அதுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இதுதான் கமலுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பின், அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, மன்மத லீலை, அவர்கள், தப்புத்தாளங்கள், நிழால் நிஜமாகிறது, மசோரித்ரா, புன்னகை மன்ன, உன்னால் முடியும் தம்பி, நினைத்தாலே இனிக்கும் போன்றவற்றிலும் மசோரரித்ரா, அந்தமைன அனுபவம், ஆகாலி ராஜ்யம் போன்ற தெலுங்கு படங்களிலும், ஏக் துஜே கேலியே, பியாரா தரானா, ஜரா சா ஜிந்தகி, ஏக்ந பஹேலி போன்ற இந்தி படங்களிலும் வாய்ப்புகளை அள்ளி அள்ளி வழங்கினார். இதில் பார்த்தாலே பரவசம், தில்லுமுல்லு போன்ற படங்களில் எல்லாம் சிறப்பு தோற்றமும் உண்டு.
மை டியர் ராஸ்கல்
பாலச்சந்தர் கமலுக்கு நிறைய கடிதங்கள் எழுதுவார். திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களாகவும், தந்தை மகனிடம் பாசத்தை வெளிப்படுத்தும் பாங்காகவும் அந்த கடிதங்கள் இருக்கும். ஆனால் கடிதங்களில் ஆரம்பிக்கும் முதல் வார்த்தையே, "மை டியர் ராஸ்கல்" என்றுதான் இருக்கும். அதேபோல கமலும், இயக்குனர் சிகரத்தை அப்பா என்றுதான் அழைப்பார். இதுவரை இயக்குனரை போனில் தொடர்பு கொண்டு பேசியதே இல்லை. அனந்துவிடமோ அல்லது அதற்கு பின்னர் உதவியாளராக இருந்த மோகனிடமோ போன் செய்துவிட்டுத்தான் சார் `ஃப்ரியா என்று கேட்டுவிட்டுதான், பிறகுதான் போனில் பேசுவார்.
அதிசயமானவன் கமல்
'நினைத்தாலே இனிக்கும்' டிஜிட்டலில் மாற்றப்பட்ட படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாலச்சந்தர், ‘அவனால் நான் வளர்ந்தேனா அல்லது என்னால் அவன் வளர்ந்தானா' என்பதுதான். முதலில் என்னால் கமல் வளர்ந்தான். அடுத்த 20 ஆண்டுகளில் அவனால் நான் வளர்ந்தேன். அவனின் ஆர்வம், என் படங்களில் போட்டி போட்டு நடிக்கிற விதம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அதிசயமானவன் கமல். சினிமாவில் என்னென்ன வரப்போகுது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கமல் அப்பவே எனக்கு நிறைய டெக்னாலஜி பற்றி சொல்லுவான். எனக்கு படிக்க நேரம் கிடையாது. ஆனால் கமலுக்கு படிக்கிறதே நேரமா இருந்துச்சு அப்போ" என்றார் பாலச்சந்தர்.
பாரதிராஜா காலிலே விழுவேன்
செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு என ரஜினி, கமலை மாறி மாறி தன் படங்களில் பயன்படுத்தி, பண்படுத்தினார் இயக்குனர் சிகரம். எம்.ஜி.ஆர்., சிவாஜி உச்சத்திலிருந்த காலத்திலும் சரி, ரஜினி, கமல் உச்சத்தைத் தொட்ட பிறகும் சரி, இவர்கள் யாரையுமே நம்பாமல், தன் கதைகளை மட்டுமே நம்பி வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் இவர். கலைகளையும், கலைஞர்களையும் உளப்பூர்வமாக மதிக்கவும், ரசிக்கவும் தெரிந்தவர். `16 வயதினிலே' பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என்று பாலசந்தர் பேசிவிட, பாரதிராஜாவோ பதறியே போய்விட்டார்.
நிறைவேறாத ஆசை
ரஜினி கமல், இருவரும் சேர்ந்து நடித்த "நினைத்தாலே இனிக்கும்' திரைப்படம் 1979ல் வெளிவந்தது. வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படமும் இதுவே. ஆனால் கடைசி காலகட்டத்தில் இவர்கள் இருவரையும் வைத்து திரைப்பட 'உலக பிரம்மா', 'கலையுலக பாரதி' என்றெல்லாம் போற்றப்படும் பாலச்சந்தர், ஒரு படம் எடுக்க மிகுந்த ஆசைப்பட்டார். ஆனால் அது கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது!!