உன்னை உயரத்திற்கு கொண்டு போக போறேன்.. சூப்பர் ஸ்டாரை செதுக்கிய சிற்பி கேபி! #KBalachander
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பிறந்தநாள் விழா இன்று.
Recommended Video
சென்னை: இன்று கேபி பிறந்த நாள். மறக்க முடியாத திரை மேதை. ரஜினிகாந்த் என்ற சூப்பர்ஸ்டாரை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த திரைஞானி.
எண்ணற்ற இளம் கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கியவர் பாலச்சந்தர். பல சூப்பர் ஸ்டார்களின் சூத்திரதாரி. தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரை அறிமுகம் செய்தவர். அறிமுகத்தோடு இல்லாமல் அவர்களை பட்டை தீட்டி ஜொலிக்க வைத்தார்.
நாடக நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியை முதன்முதலில் சந்தித்த கே. பாலச்சந்தர் பட வாய்ப்பை தர விரும்பினார். அதற்காக 'அபூர்வ ராகங்கள்' படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போல் பாலச்சந்தர் முன் நடித்து காண்பிக்க, அதனை கண்ட பாலச்சந்தர், "முதலில் தமிழை கற்றுக் கொள், உன்னை உயரத்திற்கு கொண்டு போக போறேன்" என்று சொல்லி, படத்தில் வாய்ப்பை தந்திருக்கிறார்.
'பைரவி வீடு இதுதானே?' என்று முதல் வசனம் தொடங்கியது. தொடர்ந்து பட வாய்ப்புகளை வரிசையாக கொடுத்தார். மூன்று முடிச்சு, அவர்கள், தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், தில்லுமுல்லு, இவை தவிர அந்துலேனி கதா, அந்தமைன அனுபவம் என்ற தெலுங்கு படங்களில் ரஜினிகாந்த்தை நடிக்க வைத்து மெருகூட்டினார். இதைதவிர தன்னுடைய கவிதாலயா நிறுவனம் தயாரித்த படங்களான புதுக்கவிதை, நெற்றிக்கண், நான் மகான் அல்ல, வேலைக்காரன், ஸ்ரீராகவேந்திரார், அண்ணாமலை, முத்து, சிவா என எல்லாமே ரஜினிகாந்த்தை ரசிகர்கள் உச்சாணிகொம்பில் வைத்து அழகுபார்த்தனர்.
தேம்பி அழுத ரஜினி
அதனால்தானோ என்னவோ, பாலச்சந்தரை என்றுமே தன்னுடைய வழிகாட்டி என்றும், அவர் தனக்கு தந்தை போல என்றும் ரஜினி அடிக்கடி கூறுவார். அதுமட்டுமல்லாமல், "என்னை திருத்தவும், கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குனர் நீங்கள்தான்" என்று பாலச்சந்தரிடம் அடிக்கடி கூறுவாராம் ரஜினி. ஒருநாள் பாலச்சந்தரிடம், "நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜிராவை, நீங்கதானே ரஜினிகாந்த்தா ஆக்கினீங்க? திடீர்னு வந்த இந்த புகழ் போதையை தாங்கிக்கிற சக்தி இல்லை சார்" என்று ரஜினி தேம்பி தேம்பி ஒரு குழந்தையை போல் அழுதாராம். இதை கே.பி.யே ஒருமுறை பேட்டியில் சொன்னார்.
கமலை பாத்து கத்துக்க
ஒருமுறை ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் பட ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. ரஜினிக்கான ஷாட் எடுத்து முடித்தாயிற்று. கமல் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருந்தன. அந்த இடைப்பட்ட நேரத்தில் ரஜினி ஸ்டுடியோ வெளியில் நின்று சிகரெட் பிடிக்க, அப்போது அங்கே வந்த பாலச்சந்தர், "உள்ளே வந்து கமல் எப்படி நடிக்கிறான்னு பாரு... கத்துக்க.." என்று அறிவுறுத்தியதாக ரஜினியே இதை ஒரு பேட்டியிலும் கூறியிருக்கிறார்.
ரசித்து ரசித்து நடித்த ரஜினி
'தில்லுமுல்லு' படம் பண்ணுவதில் ரஜினிக்கு ஒரு தயக்கம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் பாலச்சந்தர்தான், "தைரியமா பண்ணுப்பா... நான் பாத்துக்கறேன்" என்று நம்பிக்கையூட்டி செய்ய வைத்தார். அதன்பின்னர் அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து ரஜினி செய்தார் என்றும், அதன் முன்பாதி காமெடியாகவும், பின்பாதி சீரியஸாகவும் வைத்தேன். அதன்பின்னர்தான், இப்படி முன்பாதி காமெடி, பின்பாதி சீரியஸ் என்ற ட்ரெண்டே உருவானது, முத்து, அண்ணாமலை படங்கள் போல" என்றார் பாலச்சந்தர்.
உச்சக்கட்ட விசுவாசம்
பாலச்சந்தர் மறைந்த அன்று ரஜினி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், "இருட்டுப் பாதையில் சென்ற இந்த முரட்டு வாலிபனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து வழிகாட்டியவரை, ‘தந்தை' என்றுதானே கூற முடியும். 1980-களில் நான் சினிமா மீது வெறுப்புற்று, ‘எனக்கு சினிமாவே வேண்டாம். என்னை விட்டுவிடுங்கள்' எனக் குழம்பித் தவித்தபோது, ‘டேய்... ஆறு மாசம் பொறுமையா இரு. அதுக்கு அப்புறமா சினிமாலே இருக்கிறதா, வேண்டாமானு நீயே முடிவு செஞ்சுக்க' எனக் கூறி என் தவறான முடிவை அவர் மட்டும் தடுத்திருக்காவிட்டால், என்னுடைய இன்றைய முகவரி என்றோ தொலைந்து போயிருக்கும்" என்று ரஜினி தன் குருவுக்கு தெரிவித்த அஞ்சலியின் உச்சக்கட்ட விசுவாசமே இது.