தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்! மீன்பிடி வலைகள் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் இருந்து செவ்வாய்கிழமையன்று பாம்பன் மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். நேற்றிரவு அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை மன்னார் பகுதி தமிழ் மீனவர்கள், பாம்பன் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை அபகரித்து சென்றுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதால் எங்கள் கடல் வளம் அழிகிறது. எங்களால் தொழிலுக்கு வரமுடியவில்லை. இதை தடுப்பதற்கு உங்கள் அரசும், நாட்டுப் படகு மீனவர்களும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள்.
எனவே, இரட்டைமடி வலையை பயன்படுத்துவதை நிறுத்தும் வரை மீன் பிடிக்க வரும் நாட்டுப்படகு மீனவர்களது வலைகளை எடுத்துச் செல்வோம் என்று கூறி பாம்பன் மீனவர்களின் வலைகளை அபகரித்து சென்றுள்ளனர் இலங்கை மீனவர்கள். மேலும், அபகரிக்கப்பட்ட வலைகள் அனைத்தும் மன்னாரில் உள்ள மீனவர் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், பிரச்னைக்கு தீர்வு கண்டபின், வலைகளை திரும்ப தருகிறோம் எனவும் கூறியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் டேவிட், சேசு, ஜான் பிரிட்டோ உள்ளிட்ட பலருக்கு சொந்தமான 40 மீன்பிடி வலைகளை அவர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.
இதுவரை விசைப்படகு மீனவர்களுக்கு மட்டுமே இலங்கை கடற்படையினரால் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், பாரம்பரிய முறையில் மீன் பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்களுக்கும் தற்போது இலங்கை மீனவர்களால் பிரச்னை ஏற்பட்டிருபது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.