2 கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத தமிழ் பெண்ணுக்கு சாதனையாளர் விருது
சென்னை: 2 கைகளை இழந்தாலும் நம்பிக்கையுடன் படித்ததுடன் சமூக சேவை செய்யும் தமிழக இளம்பெண்ணுக்கு அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்று சிறந்த பெண் தலைவி என்ற விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மனைவி ஹேமமாலினி. அவர்களின் மகள் மாளவிகா(27). பல ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் ராஜஸ்தானில் வேலை பார்த்ததால் அவர் தனது குடும்பத்துடன் அங்கு வசித்தார். 2003ம் ஆண்டு மாளவிகா ராஜஸ்தானில் 8ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது கார்கில் போர் நடந்தது.
போரின்போது பயன்படுத்தப்பட்ட குண்டு ஒன்று வெடிக்காமல் கிடந்துள்ளது. அதை எடுத்த மாளவிகா பந்து போன்று நினைத்து விளையாடியபோது அது வெடித்துச் சிதறியது. இதில் மாளவிகா தனது இரண்டு கைகளையும் இழந்தார். மேலும் அவரின் காலும் சேதமடைந்தது.
முதலில் ஜெய்பூரில் சிகிச்சை பெற்ற அவர் பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதில் அவரது படிப்பு 2 ஆண்டுகள் பாதிக்கப்பட்டது. தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் 10ம் வகுப்பு தேர்வு எழுதப்போவதை நினைத்து அவர் கவலை அடைந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 10ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுதினார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று தனித்தேர்வர்கள் மத்தியில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அவர் பிளஸ் 2, பி.ஏ., எம்.எஸ்.டபுள்யூ, எம்.பில். படித்தார். தற்போது பி.ஹெச்டி. படித்து வருகிறார். கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து படித்து வரும் மாளவிகாவை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தொண்டு நிறுவனம் கவுரவப்படுத்தியுள்ளது.
அந்த தொண்டு நிறுவனம் மாளவிகாவுக்கு சிறந்த பெண் தலைவி என்னும் விருதை வழங்கியுள்ளது. சமூக சேவை செய்வதே தனது நோக்கம் என்று கூறும் மாளவிகா தன்னை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார்.